ஹிமாசலப்பிரதேச மாநிலத்தில் மஞ்சி ஆறு மற்றும் பேனேர் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் கூடும் இடத்தில் இந்த காங்க்ரா எனும் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. தௌலதா மலைத்தொடர் மற்றும் சிவாலிக் மலைத்தொடர் ஆகிய இரண்டு மலைகளுக்கிடையே காணப்படும் காங்க்ரா பள்ளத்தாக்கில் இந்த பிரசித்தமான சுற்றுலாத்தலம் வீற்றுள்ளது. தேவ பூமி என்ற சிறப்பு பெயரிலும் இந்த பிரதேசம் அழைக்கப்படுகிறது.
ஆரியர் அல்லாத பூர்வகுடி வம்சத்தினர் ஆரியரின் வருகைக்கு முன்பே இப்பகுதியில் வசித்ததாக வேதங்கள் கூறுகின்றன. மஹாபாரத புராணத்தில் இந்த பிரதேசம் திரிகர்த்த ராஜ்ஜியம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது
10 நூற்றாண்டில் கஜினி முகமது இப்பகுதிக்கு படையெடுத்து வென்றபின் காங்க்ரா பகுதி முஸ்லிம்களின் ஆளுகைக்குக்கீழ் வந்துள்ளது. அவர்களுக்குபின் கடோச் எனப்படும் பழமையான ராஜவம்சத்தின் ஆட்சியில் காங்க்ரனிருந்துள்ளது.
முதல் ஆங்கிலேயே-சீக்கிய போரின் முடிவில் ஆங்கிலேயர்களால் இப்பகுதி 1846ம் ஆண்டு கைப்பற்றப்பட்டு காலனிய இந்தியாவில் ஒரு மாவட்டமாக இருந்திருக்கிறது. 1947ல் கிடைத்த சுதந்திரத்துக்குப்பிறகு பஞ்சாப் பகுதியோடு இணைக்கப்பட்டு பின்னர் 1966ம் ஆண்டில் ஹிமாசல் பிரதேச மாநிலத்தோடு சேர்க்கப்பட்டிருக்கிறது.
காங்க்ரா மாவட்டத்தில் பயணிகள் விரும்பக்கூடிய பல சுற்றுலா அம்சங்களும் எழில் தலங்களும் அமைந்திருக்கின்றன. கரேரி ஏரி, பகலாமுகி கோயில் மற்றும் காளேஷ்வர் மஹாதேவ் கோயில் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
கடல் மட்டத்திலிருந்து 2934மீ உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கரேரி ஏரிக்கு மலையேற்றப்பாதையின் வழியாக சென்றடையலாம். தௌலதா மலையில் பனிஉருகி ஓடிவரும் நீர் இந்த ஏரியை நிரப்புகிறது. காளேஷ்வர் மஹாதேவ் கோயில் மற்றும் சிவலிங்கம் போன்றவை ஏராளமான யாத்ரீகர்களால் விரும்பப்படும் பிரசித்தமான அம்சங்களாக புகழ் பெற்றுள்ளன.
மேலும், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள ஹரிபூர் குலேர் எனும் புராதன நகரம் பண்டைய குலேர் ராஜ்ஜியத்தின் உன்னதமான சின்னங்களை கொண்டுள்ளது. பிரஜேஷ்வரி கோயில் எனும் முக்கியமான யாத்ரீக திருத்தலமும் பக்தர்களால் அதிக அளவில் விஜயம் செய்யப்படுகிற்து.
மஹாராணா பிரதாப் சாகர் எனப்படும் நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள சதுப்பு நிலப்பகுதியில் ஏராளமான பறவைகள் வசிப்பதால் பறவை ரசிகர்கள் அதிகம் விஜயம் செய்யும் இயற்கை பிரதேசமாகவும் திகழ்கிறது.
காங்க்ரா பகுதியில் ஷாபூர் மற்றும் நுர்பூருக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் கொட்லா கோட்டை மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். தனியே உயர்ந்து நிற்கும் ஒரு சிகரத்தில் அமைந்திருப்பதால் இந்த கோட்டையிலிருந்து அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
குலேர் வம்ச மன்னர்களால் இக்கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இக்கோட்டையின் வாசலில் உள்ள பகுளாமுகி கோயிலும் சுற்றுலாப்பயணிகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.
தெற்கு காங்க்ராவிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மஸ்ரூர் பாறைக்குடைவுக்கோயில் வளாகம் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமாக காங்க்ரா பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது.
10 நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான கோயில் ஸ்தலத்தில் ஒற்றை மலைக்குன்றை குறுக்கும் நெடுக்குமாக வெட்டியும், குடைந்தும், செதுக்கியும் வித்தியாசமான கலைநுணுக்கங்கள் கொண்ட கற்கோயில் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பாறைக்கோயில் வளாகம் இந்தோ-ஆரிய பாணியில் காட்சியளிக்கிறது. அஜந்தா எல்லோரோ குகைக்கோயில்களை இவை ஒத்திருப்பதாக சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 15 கோயில்கள் இந்த கோயில் வளாகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் பிரதான கோயில் ராமபிரான், லட்சுமணர், சீதா மற்றும் சிவபெருமான் ஆகியோருக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
தௌலதா மலைத்தொடர், பிரஜேஷ்வரி கோயில், நாதௌன், கத்கர், ஜவாலி ஜி கோயில், காங்க்ரா ஆர்ட் காலரி, சுஜான்பூர் கோட்டை, ஜட்ஜஸ் கோர்ட் மற்றும் சிவா கோயில் போன்றவை காங்க்ராவில் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.
இவை தவிர தர்மஷாலா, பெஹ்னா மஹாதேவ், போங் லேக் சரணாலயம், சித்தநாதா கோயில், மக்லெயாட் கஞ்ச், தாராகர் அரண்மனை மற்றும் நாகர்கோட் கோட்டை போன்றவையும் சிறப்பான அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் விமரிசையாக நடத்தப்படும் ‘தி இண்டர்நேஷனல் ஹிமாலயன் ஃபெஸ்டிவல்’ காங்க்ரா பகுதியின் சிறப்பம்சமாக அறியப்படுகிறது. சமாதான செயல்பாடுகளுக்காக தலாய் லாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. திபெத்தியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதும் இந்த திருவிழாவின் நோக்கமாக உள்ளது.
முக்கியமான சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்ப்பதோடு மட்டுமல்லாமல் காங்க்ரா பகுதியில் மலையேற்றத்தில் மற்றும் மலைப்பயணத்தில் ஈடுபட்டும் அற்புதமான இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
கரேரி ஏரிக்கு செல்லும் பாதை, மர்சூர் பாறைக்கோயில் வளாகத்துக்கு செல்லும் பாதை போன்றவை சாகச மலையேற்றப்பயணத்துக்கு ஏற்றதாக உள்ளன. காங்க்ராவிலிருந்து சம்பா பள்ளத்தாக்கிற்கு செல்லும் வழியும் மலைப்பயணத்துக்கு உகந்ததாக பிரசித்தி பெற்றுள்ளது.
இவை தவிர லகா பாஸ், இந்தர்ஹரா பாஸ் எனப்படும் கணவாய் பாதைகளும் முக்கியமான மலையேற்றப்பாதைகளாக அமைந்துள்ளன. மேலும், தரம்ஷலா-லகா பாஸ், மெக்லியொட்கஞ்ச் -மினிகியானி பாஸ், தரம்ஷலா-தலாங் பாஸ், பைஜ்நாத்-பராய் ஜாட் பாஸ் மற்றும் பீம் கஸுத்ரி பாஸ் போன்றவை கங்க்ரா பள்ளத்தாக்குப்பகுதியில் உள்ள ஐந்து முக்கியமான மலையேற்றப்பாதைகளாகும்.
காங்க்ரா பகுதிக்கு விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். மார்ச் மாதம் தொடங்கி ஜுன் மாதம் வரை நிலவும் கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்வது சிறந்தது. வெளிச்சுற்றுலாவுக்கு இடைஞ்சல் தராத பருவநிலை நிலவுவதால் மழைக்காலத்திலும் இப்பகுதிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளலாம்.