நாகர் கோட் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த காங்க்ரா கோட்டை காங்க்ரா ராஜவம்சத்தை சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 350 அடி உயரத்தில் 4 கி.மீ பரப்பளவில் இந்த கோட்டை வளாகம் அமைந்துள்ளது.
காங்க்ரா நகரப்பகுதியிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள இந்த கோட்டை ஸ்தலமானது முன்னர் புராணா காங்க்ரா என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஸ்தலம் மஹாபாரத புராணத்திலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டருடைய பயணக்குறிப்புகளிலும் இடம் பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பங்கங்கா மற்றும் மஞ்சி ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை உறுதியான கோட்டைச்சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோட்டையின் உள்ளே நுழைவதற்கு இரண்டு வாயிற்கதவுகளுக்கிடையே அமைக்கப்பட்டுள்ள முற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. பழங்காலத்திய சீக்கிய குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள இந்த வாயில் அமைப்பு ‘பதக்’ அல்லது ரஞ்சித் சிங் கேட் என்று அழைக்கப்படுகிறது.
நுழைவாயில் பகுதியிலிருந்து ஒரு சரிவான பாதையை கடந்து அஹானி மற்றும் அமீரி தர்வாஸா எனும் வாசல்களின் வழியாக பார்வையாளர்கள் கோட்டையின் உச்சியை அடையலாம்.
காங்க்ரா பகுதியின் முதல் கவர்னரான நவாப் அலிஃப் கான் இந்த கோட்டை வாசல்களை கட்டியுள்ளார். பன்முக காவல் கோபுரம், லட்சுமி நாராயணன் கோயில் மற்றும் ஆதிநாத் கோயில் போன்றவையும் இந்த கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளன.