மடயிப்பாறா எனும் பசுமையான இந்த பாறைத்திட்டு மற்றும் லாடரைட் பாறைகளுடன் காட்சியளிக்கும் இந்த இயற்கை எழில் ஸ்தலம் குப்பம் ஆற்றின் கரையில் உள்ள பழயங்காடி எனும் சிறு நகரத்தில் உள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.
பல்லுயிர்ச்சூழலுக்கான இயற்கை அம்சங்களை கொண்டுள்ள இந்த பகுதி எழிமலா மன்னர்களின் காலத்திலிருந்து துவங்கும் வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளது.
இந்த மலைப்பாறைத்திட்டின் ஒரு பகுதியில் பழி கோட்டா எனும் புராதனமான கோட்டை மற்றும் அதன் காவல் கொத்தளங்களை காணலாம். இப்பகுதியிலுள்ள மற்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களாக மடயிக்காவு அல்லது திருவார் காடு பகவதி கோயில்(காளிக்கோயில்), வடக்குண்ணு கோயில் (சிவன் கோயில்), மாலிக் இபின் தினார் மசூதி எனப்படும் மடாய் மசூதி ஆகியவற்றை குறிப்பிடலாம். இவை யாவுமே ஆன்மிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மடயிப்பாறா மலைத்திட்டுப்பகுதி இயற்கை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் காட்டுயிர் அம்சங்களையும் தாவரச்செழிப்பையும் கொண்டுள்ளது. ஆராய்ச்சிக்குறிப்புகளின்படி 300 வகையான பூக்கும் தாவரங்கள், 30 வகையான புல்தாவரங்கள், 100 வகையான வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் 150 வகையான பறவையினங்கள் இங்கு காணப்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இங்குள்ள பலவகையான மூலிகைத்தாவரங்களுக்கும் இந்த ஸ்தலம் புகழ்பெற்றுள்ளது. தற்போது அதிகமான சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை பெற்றிராவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு வளர்ச்சியடைந்த சுற்றுலாஸ்தலமாக மாறுவதற்கான எல்லா இயல்புகளையும் இந்த மடயிப்பாறா எனும் இயற்கை எழிற்பிரதேசம் தன்னுள் கொண்டுள்ளது.