மொப்பிளா பே அல்லது மாப்பிள்ளா பே என்று அழைக்கப்படும் இந்த கடற்கரை வளைகுடாப்பகுதி கண்ணூர் நகரத்திலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்திலேயே உள்ள அய்க்கரா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
இயற்கை அழகுக்கும் வரலாற்றுப்பின்னணிக்கும் பிரசித்தி பெற்றுள்ள இந்த இயற்கைத் துறைமுகம் ஒரு புறம் செயிண்ட் ஆஞ்சலோ கோட்டையையும் மறுபுறம் அரக்கல் அரண்மனையையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
வரலாற்றுக்கால பாரம்பரியத்தின் அடையாளங்களூடன் காட்சியளிக்கும் இந்த துறைமுகம் கொளாத்திரி ராஜவம்சத்தினரின் ஆட்சியில் நீண்டகாலம் சிறப்பாக விளங்கியுள்ளது.
கொளத்துநாடு பிரதேசத்தின் முக்கியமான வியாபாரக் கேந்திரமாகவும் திகழ்ந்துள்ள இது வெளிநாடுகளுடன் வணிகத்தொடர்புகளை கொண்டிருந்திருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மறக்காமல் ஒரு நாள் பயணமாக இந்த வளைகுடாக்கடற்கரை மற்றும் செயிண்ட் ஆஞ்சலோ கோட்டை, அரக்கல் அரண்மனை போன்றவற்றுக்கு விஜயம் செய்து ரசிப்பது சிறந்தது.
இங்கு கோட்டையிலிருந்து ஒரு சுவர்போன்ற அமைப்பு கடலுக்குள் நீண்டு காணப்படுகின்றது. நிலநீர்த்தேக்கமும் கடலும் பிரிக்கப்பட்டு கோட்டைக்கு வரும் படகுகள் நங்கூரமிடுவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலாப்பயணிகள் இந்த வளைகுடாப்பகுதியில் படகுச்சவாரியில் ஈடுபடலாம். இருப்பினும் பருவநிலை குறித்த எச்சரிக்கையுடன் படகில் ஏறுவது நல்லது. இந்தோ- நார்வீஜிய ஒப்பந்த திட்டத்தின் கீழ சமீபத்தில் பல புதுப்பிப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளூர் மீன்பிடிக்கேந்திரமாக இந்த மாப்பிள்ளா வளைகுடா மாறியுள்ளது மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் பிரபல்யமடைய துவங்கியுள்ளது.