பைதல் மலா அல்லது வைதல் மலா என்று அழைக்கப்படும் இந்த மலைவாசஸ்தலம் கேரள – கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கண்ணூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரம் பயணம் செய்து இந்த ஸ்தலத்தை அடையலாம்.
கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் உள்ள இந்த மலைவாசஸ்தலம் சுற்றிலும் பசுமையான மலைச்சிகரங்களால் சூழப்பட்டு பிரமிக்க வைக்கும் இயற்கை வனப்புடன் காட்சியளிக்கிறது.
மலைப்பாங்கான அமைப்பினை கொண்டுள்ள இந்த இயற்கை சொர்க்கமானது பல்வேறு இயற்கை எழிற்காட்சிகளை கண்டு ரசிப்பதற்காகவே பயணிகளை ஈர்க்கிறது.
பைதல் மலா மலைவாசஸ்தலத்தில் பலவகையான உயிரினங்களும் அரிய தாவரவகைகளும் காணப்படுவதால் இயற்கை ரசிகர்கள் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் விருப்பமான பொழுதுபோக்கு ஸ்தலமாக பெயர்பெற்றுள்ளது.
இந்த மலையில் பாதுகாப்பான நடைப்பாதை வழிகளும் காணப்படுவதால் மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இது பிடித்தமான ஸ்தலமாக இருக்கும். இப்பாதைகளின் மலையுச்சியை அடைவதற்கு 6 கி.மீ நடக்க வேண்டியுள்ளது. இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்காக இதனை ஒரு மலைப்பிரதேச ரிசார்ட் வளாகமாக மாற்றவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சுற்றிலும் பசுமையான வண்ணமயமான இயற்கை காட்சிகள் நிரம்பி வழிவதால் புகைப்பட ஆர்வலர்களை அதிகம் ஈர்க்கும் இந்த மலைவாசஸ்தலமானது முதல் முறை தரிசிக்கும் பயணிகளை பரவசத்தால் திணற வைக்கும் சக்தி கொண்டது.
புல்வெளிகள் மற்றும் மலைப்பகுதிகளிலிருந்து வீசும் தூய்மையான இதமான காற்று பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் உள்ளதால், கோடைக்காலத்தின் வெப்பத்திலிருந்து தப்பிக்க இது பொருத்தமான ஸ்தலமாகும்.
இந்த மலைப்பகுதியில் வைதல்கோன் எனும் பழங்குடி மன்னர் வசித்த அரண்மனையின் சிதிலமடைந்த மிச்சங்களும் காணப்படுகின்றன.