கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள தலிப்பறம்பா எனும் இந்த நகரம் தனது அற்புதமான இயற்கை அழகுக்காகவே பிரசித்தி பெற்று விளங்குகிறது. பாம்பு போன்று வளைந்து நெளிந்து காணப்படும் மலைகள் மற்றும் நீண்ட வயல்களால் சூழப்பட்ட இந்த எழில் நகரம் சுற்றுலா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக புகழ் பெற்றுள்ளது. குப்பம் ஆறு மற்றும் வாலபட்டணம் ஆறு இப்பகுதியில் பாய்வதால் செழுமையுடனும் வளத்துடனும் தலிப்பறம்பா நகரம் காட்சியளிக்கிறது.
தலிப்பறம்பா நகரத்தின் முக்கிய சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக குட்டியேரி எனும் இடத்திலுள்ள மரத்தொங்கு பாலம் மற்றும் பரசினிக்கடவு எனும் இடத்திலுள்ள முத்தப்பன் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றுள்ளன.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் யாத்திரைஸ்தலமாக இந்த முத்தப்பண் கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், மரத்தொங்கு பாலத்தை சுற்றிலும் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் நிறைந்துள்ளன.
அது மட்டுமல்லாமல் கிருஷி விக்யான் கேந்திரா, மிளகு ஆராய்ச்சி மையம் மற்றும் பரியராம் மருத்துவ கல்லூரி ஆகியவை இந்த தலிப்பறம்பா நகரத்தில் அமைந்துள்ளன.
மிகப்பழமையான தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் ராஜ ராஜேஸ்வர கோயில் எனப்படும் சிவன் கோயில் மற்றும் கிருஷ்ண பஹவானுக்கான திருச்சம்பாரம் கோயில் ஆகியவை இந்த ஸ்தலத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்களாக விளங்குகின்றன.
இந்த கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களின் போது தலிப்பரம்பா நகரம் முழுவதுமே எழிற்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. பலவிதமான கேரள நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இந்த திருவிழாக்களின் போது கண்டு ரசிக்கும் அனுபவத்திற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்களும் பயணிகளும் ஆர்வத்துடன் இந்நகரில் திரள்கின்றனர்.