தெளிசேரி கோட்டை அல்லது தலசேரி கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சரித்திர ஞாபகார்த்த சின்னமாகும். இது கண்ணூர் நகரத்திலிருந்து 22 கி.மீ தூரத்தில் தலசேரி நகரத்தில் சுலபமாக சாலை மார்க்கமாக சென்றடையும்படி அமைந்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனியாரால் 1708ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை மிக நீண்ட காலனிய ஆதிக்கத்தின் சான்றாக காட்சியளிக்கிறது.
முழப்பிளாங்காட் கடற்கரையில் ஒரு குன்றின் உச்சியில் இந்த கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது முக்கியமான ராணுவ படைக்கேந்திரமாக இந்த கோட்டைபகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டையின் அடித்தளமானது பிரம்மாண்டமான லாடரைட் கற்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உயர்ந்தோங்கி நிற்கும் கோட்டைச்சுவர்கள் மற்றும் மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், அரபிக்கடலை நோக்கி செல்லும் ரகசிய சுரங்கப்பாதைகள் என்று பல நுட்பமான அம்சங்களைக்கொண்ட இந்த கோட்டையானது பார்வையாளர்களை முதல் பார்வையிலேயே தன் பிரம்மாண்டத்தால் பிரமிக்க வைத்துவிடுகிறது.
இன்று தலசேரி கோடை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஒரு புராதன ஆங்கிலிகன் தேவாலயம், ஆங்கிலேய அதிகாரிகள் புதைக்கப்பட்ட சமாதித்தோட்டம் மற்றும் வெல்லஸ்லி பங்களா போன்ற இதர முக்கியமான அம்சங்களையும் இந்த கோட்டை வளாகத்துக்கு அருகேயே பயணிகள் பார்க்கலாம்.
பார்வை நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
நுழைவுக்கட்டணம்: ஏதுமில்லை