கொண்டனா குகைகள் கர்ஜத் ஸ்தலத்திலேயே அமைந்துள்ளன. இவை வரலாற்றுக்கால பௌத்த மரபிற்கான சான்றுகளாய் காட்சியளிக்கின்றன. பாறைக்குடைவு கோயில்களான இவற்றின் உள்ளே பல சிற்பங்கள், ஸ்தூபிகள், விஹாரங்கள் மற்றும் சைத்யாக்கள் போன்றவை அமைந்துள்ளன.
இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குடைவறைக்கோயில்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையை உடையன என்பது ஒரு மலைக்க வைக்கும் விஷயமாகும்.
இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஸ்தூபிகள் அக்கால பௌத்த சிற்பக்கலை பாணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. பெரும்பாலும் இந்த சிற்பங்கள் நடனத்தோற்றத்தில் காட்சி அளிக்கும் ஆண், பெண் உருவங்களைக் கொண்டுள்ளன.
துரதிர்ஷ்டவசமாக, பூகம்பம் போன்ற இயற்கைப்பேரிடர் காரணமாக இந்த குடைவறைக்கோயிலின் வாசல், மற்றும் பல ஸ்தூபிகள் சிதைவடைந்து காட்சியளிக்கின்றன.
வருடம் முழுவதும் பல புத்த யாத்ரீகர்கள் இந்த புராதன குடைவறைக்கோயில்களுக்கு வருகை தருகின்றனர். இந்த ஸ்தலத்தின் புனிதம் கருதி மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற அம்சங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.