கர்ணால் கண்டோன்மெண்ட் சர்ச் டவர் எனப்படும் இந்த கோபுர அமைப்பு செயிண்ட் ஜேம்ஸ் தேவாலயத்தின் ஒரு பகுதியாகும். கர்ணால் நகரத்தில் சீக்கிய ராணுவ எழுச்சியை சமாளிப்பதற்காக 1805ம் ஆண்டு இந்நகரத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கண்டோன்மெண்ட் பகுதியில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.
பின்னர் மலேரியா தொற்று நோய் இப்பகுதியில் பரவியதால் ஆங்கிலேய ஆட்சியினர் இந்த கண்டோன்மெண்ட் பகுதியை 1843ம் ஆண்டு அம்பாலாவுக்கு மாற்றி விட்டனர். தேவாலய அமைப்புகளை மட்டும் பெயர்த்து எடுத்துசென்று அம்பாலாவில் மறுநிர்மாணம் செய்தபின் இந்த கோபுர அமைப்பை மட்டும் அப்படியே விட்டுவிட்டனர். மக்களிடம் வசூலித்த தொகையில் இந்த கோபுரம் எழுப்பப்பட்டது என்பதால் அதனை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணம்.
35 மீட்டர் உயரமுள்ள இந்த பிரமாண்ட கோபுரம் குதிரைப்பந்தய மைதானத்திற்கும் ராணுவப்பயிற்சி மைதானத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
அலங்கார நுணுக்கங்களைக்கொண்ட சிலுவை அமைப்பை உச்சியில் கொண்டிருக்கும் இந்த கோபுரம் ஆங்கிலேயர் கால கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வீற்றிருக்கிறது. நான்கு அடுக்குகள் கொண்ட இந்த கோபுரத்தை ஏழு மைல் தூரத்திலிருந்தே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முதல் தளம் இத்தாலிய பாணி வெளிப்பூச்சுடன் காட்சியளிக்கிறது. மேல் தளம் சுண்ணாம்பால் பூசப்பட்டுள்ளது. ரோமானிய கட்டிடக்கலை பாணியில் அரை வட்ட வடிவிலான சாளர விதான அமைப்புகளையும் இது கொண்டுள்ளது.
தேவாலயத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளும் இந்த கோபுர அமைப்பில் வைக்கப்பட்டுள்ளன. கர்ணால் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த கர்ணால் கண்டோன்மெண்ட் சர்ச் டவர் பிரசித்தமாக அறியப்படுகிறது.