பழைய கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கர்ணால் கோட்டை முக்கியமான வரலாற்று சம்பவங்களை பின்னணியில் கொண்டுள்ளது சிந்து பிரதேசத்தை ஆண்ட கஜ்பத் ராய் என்பவரால் 1764ம் ஆண்டில் இது கட்டப்பட்டிருக்கிறது.
பின்னர் மராத்தாக்கள், லட்வா பிரதேசத்தை ஆண்ட ஜார்ஜ் தாமஸ் ஆகியோர் வசம் இந்த கோட்டை சென்றிருக்கிறது. அதையடுத்து ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தபின் 1805ம் ஆண்டு கர்ணால் நவாப் உரிமைக்குள் வந்தது.
நவாப் உரிமைக்குள் இருந்து ஒரு வருடம் கழித்து இந்த கோட்டையை திரும்பவும் ஆங்கிலேய ராணுவம் எடுத்துக்கொண்டு தனது கண்டோன்மெண்ட் கட்டுமானத்தின் ஒரு அங்கமாக பயன்படுத்தியது.
இருப்பினும் 1843ம் ஆண்டில் மலேரியா நோய் ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக ஆங்கிலேயர்கள் இந்த கண்டோன்மெண்ட் வளாகத்தை அம்பாலாவுக்கு மாற்றிவிட்டனர். அதன்பின்னர் இந்த கோட்டைப்பகுதி படையினர் தங்கும் இடமாகவும், சிறைச்சாலை மற்றும் நீதிமன்றம் போன்றவை இயங்கும் வளாகமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதற்குப்பின்னர், தோஸ்த் முஹம்மத் கான் எனும் காபுல் மன்னர் கல்கத்தா நோக்கி செல்லும்போது கைது செய்யப்பட்டு இந்த கோட்டையில் தங்கவைக்கப்பட்டார். அச்சமயம் இறந்து போன அவரின் மகள் உடலும் இந்தக்கோட்டையின் வடகிழக்கு கொத்தளத்திற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
திரும்பவும் இந்த கோட்டை கர்ணால் நவாப் வசம் ஒப்படைக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் அரசாங்கம் மீண்டும் அதை 1616 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது. தற்போது இந்த கோட்டை தாசில்தார்கள் மற்றும் இதர உள்ளூர் அதிகாரிகளின் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.