கோஸ் மினார்கள் அல்லது மிலே மினார்கள் என்று அறியப்படும் இந்த மினார் கோபுர அமைப்புகள் அக்காலத்திய இந்தியாவின் முக்கிய சாலைகளில் தூர அளவை குறிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்தன.
ஒரு கோஸ் மினாரின் தூரம் என்பது 1.1 மைல் அல்லது 3.2 கி.மீ தூரமாக இருக்கிறது. முகாலய ஆட்சியின்போது நாடு முழுதும் முக்கிய ராஜ பாட்டைகளில் இந்த மைல் கோபுரங்கள் (கோஸ் மினார்) கட்டப்பட்டன.
இந்த அற்புதமான திட்டத்தின்படி தூரம் குறித்த தகவல் பயன்பாடு மட்டுமல்லாமல் யாத்ரீகர்கள் பயணத்தின்போது தங்கி ஓய்வெடுக்க உதவும் அறையாகவும் இந்த மினார் கோபுரங்கள் பயன்பட்டன.
வட்ட வடிவ அடித்தளம் மற்றும் கூம்பு போல் நீண்ட உச்சியை கொண்ட இவை ஒரு பீட அமைப்பின்மீது சுண்ணாம்புக்கலவை பயன்படுத்தி எழுப்பப்பட்டிருக்கின்றன.
செய்தி கொண்டு செல்வதற்கு உதவும் ஒரு கருவியாகவும் இது அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கோபுரத்திலிருந்து மறு கோபுரத்திற்கும் அதிலிருந்து அடுத்ததிற்கும் ஒரு சங்கிலி தொடர் போன்று தகவல்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
சில இடங்களில் இந்த மைல் கோபுரங்களை ஒட்டியே சத்திர அமைப்புகளும் கட்டப்பட்டு பயணிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
லாகூரிலிருந்து கர்ணால் வழியாக டெல்லி வரை நீளும் கிராண்ட் டிரங்க் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இந்த கோஸ் மினார் அமைப்புகள் இன்றும் காணப்படுகின்றன.
இவற்றில் ஒன்றை கர்ணால் நகரத்தில் பிளாட் எண் 79க்கு அருகில் காணலாம். இது தவிர நகரத்திலிருந்து 12 மைல் தெற்கே வரலாற்று காலத்தை சேர்ந்த ஒரு சத்திர அமைப்பையும் காணலாம்.