மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த கர்னாலா எனும் கோட்டை நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 439 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காடுகள் மற்றும் உயரமான மலைகள் இருபுறமும் சூழ அமைந்துள்ளது.
வரலாற்றுப்பின்னணி
துக்ளக் வம்ச ஆட்சியின்போது இந்த கர்னாலா நகரம் கொங்கண மாவட்டங்களுக்கான தலைநகரமாக விளங்கியுள்ளது. பின்னர் இது அஹ்மத்நகரை நிர்மாணித்த நிஜாம் ஷாவால் கைப்பற்றப்பட்டுள்ளது. போர்த்துகீசியர்களுடன் நிஜாம் ஷா கொண்டிருந்த நட்பின் காரணமாக கர்னாலா கோட்டை அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதியில் கர்னாலாவின் இருப்பிட முக்கியத்துவத்தை உணர்ந்த கிழக்கிந்திய கம்பெனியினர் இந்த பிரதேசத்தை விரைவில் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்து விட்டனர்.
கர்னாலா – இயற்கையின் மடியில் வீற்றிருக்கும் நகரம்
கர்னாலா பகுதியிலுள்ள பறவைகள் சரணாலயம் இயற்கை ரசிகர்களாலும் பறவை ஆராய்ச்சியாளர்களாலும் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த சரணாலயத்தில் 150 இருப்பிடப்பறவைகளும் 37 வகையான புகலிடப் பறவைகளும் வசிக்கின்றன.
மேலும், மலையேற்றத்துக்கு ஏற்ற ஏராளமான ஸ்தலங்களும் இந்தப்பகுதியில் அமைந்துள்ளன.
சுற்றுலாப்பயணிகள் ஒரு மலைவாசஸ்தலத்தில் எதிர்பார்க்கும் இனிமையான குளுமையான பருவநிலை இந்தப்பகுதியில் வருடமுழுவதும் நிலவுகிறது. எனவே மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் எப்போதும் சீதோஷ்ணநிலை இதமாக பயணிகளை வரவேற்கும் இயல்புடன் உள்ளது.
மழைக்காலத்தில் இப்பகுதியின் இயற்கை அழகு இன்னும் பசுமையுடன் பளிச்சென்று எழிலுடன் திகழ்கிறது. குளிர்காலத்தில் இங்கு சில விசேஷமான புகலிட பறவைகளை காணலாம்.
கர்னாலா மலை நகரமானது ஒரு சிறிய விடுமுறைப்பயணத்துக்கோ அல்லது வார இறுதி சிற்றுலாவுக்கோ மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. சாலை, ரயில் மற்றும் விமான மார்க்கமாக எளிதில் செல்லும் வகையில் இது போக்குவரது வசதிகளை கொண்டுள்ளது.மும்பையிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் பான்வெல் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் கர்னாலா நகரம் உள்ளது.