உத்தரகண்ட் மாநிலத்தின் கவுலா நதிக்கரையில், குமாவோன் மலைகளின் நுழைவாயிலாக கத்கோடம் பகுதி காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. குமாவோன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இவ்விடம் கடல் மட்டத்திலிருந்து 554 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத் தலம் ஆகும்.
உத்திரகண்ட் பகுதியின் இரண்டாவது பெரிய நகராட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஹல்த்வானி-கத்கொடம் 1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கத்கோடம் என்றால் 'மரக் கிடங்கு' என்று பொருள்.
இவ்விடம் இம்மாவட்டத்தின் சிறந்த வர்த்தக மையமாக இருப்பதால் இதை விட பொருத்தமான பெயர் இவ்விடத்திற்கு இருக்க முடியாது. குமாவோனி, ஹிந்தி மற்றும் கட்வாலி மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.
முன்னதாக, கவனிக்கப்படாத கிராமமாக இருந்த கத்கோடம் பகுதி மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட(1901 ஆம் ஆண்டு 375 மக்கள் மட்டுமே இங்கு இருந்திருக்கின்றனர்) மிகச்சிறிய குக்கிராமமாகவே இருந்தது.
பின்னர் 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் இங்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு, பின்பு 1884 ஆம் ஆண்டு ஹல்த்வானி ரயில் பாதை கத்கோடம் வரை நீட்டிக்கப்பட்டு இன்று வடகிழக்கு ரயில் நிலையங்களின் கடைசி ரயில் நிலையம் என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருக்கின்றது.
ஷீதளா தேவி மற்றும் காளிச்சாட் தேவிகளின் கோவில்கள் இங்கு காண வேண்டிய இரண்டு முக்கிய இடங்கள். விழாக் காலங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதை காணலாம்.
இங்கு கவுளா நதி மிகவும் பிரபலம். சத்தால் ஏரியிலிருந்து தோன்றி ஹல்த்வானி மற்றும் ஷாஹி போன்ற பல இடங்களின் வழியாக கவுளா நதி ஊடுறுவி செல்லும் காட்சி காணக் கிடைக்காதது. கவுளா நதியின் மீது கம்பீரமாக தாங்கி நிற்கும் ”கவுளா பாரஜ்” அணை பார்க்கவேண்டிய சுற்றுலாத் தலம்.
கத்கோடத்திற்கு சுற்றுலா வருவோர் அதன் அருகில் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீம்தால் என்ற சிறிய நகரத்தை தவற விட்டு விடக் கூடாது. இயற்கை ரசிகர்களின் சொர்கம் என்றழைக்கப் படும் பீம்தால் ஏரியின் புகழ் அடுக்க முடியாதது.
இந்திய புராணக் கதையான மஹாபாரதத்தில் வரும் பீமா என்ற காதாப்பாத்திரத்தை தழுவி பீம்தால் என்ற பெயரை இந்த ஏரி பெற்றது. பீம்தால் ஏரிக்கரையில் குமாவோன் அரசரான பஸ் பகதூரால் 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமாண்டமான பீமேஷ்வர் கோவிலையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மீன் காட்சியகம் இங்கு கூடுதல் அழகு.
கத்கோடத்திலிருந்து 34 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நைனிடாலின் அழகிய ஏரி நகரத்தை ரயில் வழியிலும் சாலை வழியிலும் அடையலாம் மற்றும் கத்கோடத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்தால் என்ற இடமும் காண வேண்டிய ஒன்று.
சத்தால் என்றால் ஏழு ஏரிகள் என்று பொருள். ராம் தல், நில் தமயந்தி தல், லட்சுமண் தல், கவுதரியா தல், பூர்ண தல், சுஹா தல், மற்றும் சீதா தல் போன்ற ஏழு தெளிந்த நீர் கொண்ட ஏரிகளை இங்கு காணலாம். தவிர கார்பெட் நீர் வீழ்ச்சி மற்றும் ஹெதாஹன் ஆசிரமும் இங்கு வெகுப்பிரபலம்.
கத்கோடம் செல்ல நினைப்போர் அங்கிருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்பான பந்த் நகர் விமான நிலையத்திற்கு அனுமதிச் சீட்டு வாங்குவது சிறந்தது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இங்கிருந்து மிக அருகாமையில் உள்ளதென்பதால் சர்வதேச பயணிகள் இங்கிருந்து பந்த் நகருக்கு டிக்கட் எடுத்துக் கொள்ளலாம்.
கத்கோடப் பகுதிகள் வட கிழக்கு ரயில் நிலையத்தின் கீழ் வருவதால் லக்நோ, டில்லி மற்றும் ஹவுரா போன்ற பல இடங்களுக்கும் இரயில் தொடர்பு உண்டு என்பது கூடுதல் வசதி.
சாலை வழியாக செல்ல விரும்பினால் NH-87 மூலம் செல்லலாம். காஸியாபாத், டில்லி, நைனிடால் போன்ற இடங்களிலிருந்தும் கத்கோடத்திற்கு பேருந்துகள் உண்டு.
கத்கோடத்தில் பெரும்பாலும் மிதமான வெப்பநிலையே உணரப்படும். இங்கு கோடைக்காலம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் வரை நீடிக்கும். இக்காலத்தில் வெப்பநிலை 15 ° c மற்றும் 30° C க்கு இடையில் இருக்கும். ஜூலை முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் வெப்பநிலை இதமாக இருக்கும் என்பதால் கத்கோடம் செல்ல இதுவே சிறந்த நேரம்.