ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் கத்துவா மாவட்டம் ஜம்முவில் இருந்து 88 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. அந்தோத்ரா வம்சத்தைச் சேர்ந்த ஜோத் சிங் என்னும் புகழ்பெற்ற ராஜபுத்திர அரசர் தன் மூன்று மகன்களுடன் இங்கே வாழ்ந்தார் என சொல்லப்படுகிறது.அவரது மூன்று மகன்களும் முறையே தரஃப் மஞ்சலி, தரஃப் தஜ்வால் மற்றும் தரஃப் பஜ்வால் ஆகிய நகரங்களை நிர்மாணித்தனர். இந்நகரங்கள் மக்களால் கத்தாய் என வழங்கப்பட்டு பின்நாட்களில் கத்துவா என்றானது.
கத்துவா மாவட்டம் ஜம்முகாஷ்மீரின் மிக அழகிய ஊராக கருதப்படுகிறது. இங்கிருக்கும் பானி, பன்யலாக் சந்தல், சார்த்தல், டுக்கான், பன்சால் போன்ற சிறப்பான சுற்றுலாத்தளங்களும், வழிபாட்டுத்தளங்களும் இவ்வூரின் அழகிற்கு பெருமை சேர்ப்பதாய் உள்ளது.
பானி பள்ளத்தாக்கு அடர்ந்த காடுகளுக்கும், எண்ணற்ற நீர்வீழ்ச்சிகளுக்கும், புல்வெளிகளுக்கும் புகழ்பெற்றது. புகழ்பெற்ற தெளலா வாலி மாதா கோவிலும், ஜோதியா தி மாதா கோவிலும் இங்கே அமைந்துள்ளன.
மாதா சுந்தரிகோதே, மாதா பால சுந்தரி, அய்ர்வான் கோவில், ஆஷா புராணி கோவில் போன்ற பல பெருமைவாய்ந்த கோவில்கள் கத்துவாவில் அமையப் பெற்றிருக்கின்றன.
இதுமட்டுமல்லாது பீர் சாட்டர்ஷா, குருத்வரா சிங் சபா ஆகிய மத ஸ்தலங்களும் இங்கு உண்டு. பசோலி, பத்து, ஹிராநகர், பில்லவர் ஆகிய நகரங்கள் கத்துவாவில் இருக்கும் புகழ்பெற்ற நகர்கள் ஆகும்.
பசோலி நகரம், பசோலி ஓவியங்கள் என வழங்கப்படும் சிறிய வகை ஓவியங்களுக்காகவும், கற்சிலைகளுக்கும் புகழ்பெற்றது. ராஜா போபாட் பால் என்ற மன்னரால் 1598ல் இருந்து 1614க்குள் நிர்மாணிக்கப்பட்ட பில்லாவர் நகரமும் இங்கு உள்ளது. இங்கிருக்கும் பழங்கால கோவில்களான மஹாபில்வகேஷ்வர் கோவிலும், சிவன் கோவிலும் புகழ்பெற்றவை.
நாட்டில் இருக்கும் பல முக்கிய நகரங்களில் இருந்து கத்துவாவிற்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உண்டு. உள்நாட்டு பயணிகள் கத்துவாவின் அருகிலேயே அமைந்திருக்கும் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்தும், வெளிநாட்டுப் பயணிகள் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஸ்ரீநகர் வழியாகவும் கத்துவாவை அடையலாம்.
கான்பூர், டெல்லி, ஜம்மு, ஜலந்தர், கர்னல் ஆகிய நகரங்களில் இருந்து கத்துவாவிற்கு அடிக்கடி ரயில் போக்குவரத்து உண்டு. ஊரில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ரயில் நிலையத்திலிருந்து ஊரை அடைய தனியார் வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. மேலும் புதுடில்லி, ஜம்மு, சிம்லா, ஸ்ரீநகர் , கத்ரா, உதம்பூர், சண்டிகர், பதன்கோட் ஆகிய ஊர்களில் இருந்தும் கத்துவாவிற்கு பேருந்து வசதியும் உண்டு.
துணை வெப்ப மண்டல பகுதியாக இருக்கும் கத்துவாவில் கோடைகாலம் வெதுவெதுப்பான வெப்பநிலையுடனும், குளிர்காலம் கடும்குளிராகவும் இருக்கிறது. ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த கோடைகாலத்தில் கத்துவாவிற்கு பயணப்படுவதே சிறந்ததாக கருதப்படுகிறது.