ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டடத்தில் கெஸ்ரோலி எனும் இந்த சிறிய கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் டெல்லியிலிருந்து 155 கிலோமீட்டர் தொலைவில், டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஒரு குன்றின் மீது 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இந்த கிராமத்தின் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தக் கோட்டை தற்போது மறுசீரமைக்கப்பட்டு பாரம்பரிய ஹோட்டலாகவும் மாற்றப்பட்டுள்ளது.
கெஸ்ரோலியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை மகாபாரத காலத்தின் மத்ஸ்ய ஜனபதா காண்டத்துக்கு இட்டுச் சென்று விடும். இந்த கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது நீங்கள் குன்றுக் கோட்டையை தவிர, விராட் நகரில் உள்ள புத்த விஹாரத்துக்கும் சென்று வரலாம். இங்குதான் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞான வாசத்தை கழித்ததாக சொல்லப்படுகிறது.
கெஸ்ரோலி குறித்து கொஞ்சம் தகவல்கள்...
கெஸ்ரோலி கிராமத்தின் பசுமையான இயற்கை வனப்பும் குன்றுக் கோட்டையை போலவே பயணிகளிடையே மிகவும் பிரபலம். இது டெல்லி மற்றும் அல்வார் நகரங்களுக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் வார இறுதி நாட்களை கழிப்பதற்காக எண்ணற்ற சுற்றுலாப பயணிகள் அந்த நகரங்களிலிருந்து கெஸ்ரோலி கிராமத்தை தேடி வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கெஸ்ரோலி கிராமம் விலங்கியலாளர்கள் மற்றும் பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் விருப்பமான சுற்றுலா ஸ்தலமாக இருந்து வருகிறது.
கெஸ்ரோலி கிராமத்தை எப்படி அடைவது?
கெஸ்ரோலி கிராமத்துக்கு அருகாமை விமானம் மற்றும் ரயில் நிலையங்களாக, டெல்லி இந்திரா காந்தி விமான நிலையமும், அல்வார் ரயில் நிலையமும் அறியப்படுகின்றன.
அதோடு இந்த கிராமம் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் சாலை மூலமாகவும் வெகு சுலபமாக கெஸ்ரோலி கிராமத்தை அடைந்து விடலாம்.
கேஸ்ரோலி கிராமத்தை சுற்றிப் பார்க்க சிறந்த காலம்
கெஸ்ரோலி கிராமத்தின் வெப்பநிலை அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் மிகவும் இதமானதாக இருப்பதால் இந்த காலங்களில் கெஸ்ரோலி கிராமத்துக்கு சுற்றுலா வருவதுதான் சரியான தேர்வாக இருக்கும்.