'மடாலயங்களின் பூமி' எனப்பிரபலமாக அழைக்கப்படும் கீலாங் (keylong), கடல் மட்டத்திலிருந்து 3350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் அழகிய சுற்றுலா தலமாகும். லாஹால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களின் தலைமையகமாக உள்ள கீலாங் பல்வேறு சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கீலாங்கைப்பற்றி புகழ் பெற்ற எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் "நிச்சயமாக இந்த இடம் மனிதர்களுக்கு அல்ல, கடவுள் வாழும் இடம்" என்று புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். களிப்பூட்டக்கூடியதும் மற்றும் தொன்மையான மலைத்தொடர்களோடு கூடிய பசுமையான பள்ளத்தாக்குகளும் இணைந்து வியப்பூட்டுவதாக உள்ளது.
தனிப்பட்ட கட்டமைப்பு வடிவங்கள் மற்றும் வரலாற்று தொடர்புகளால் புகழ் பெற்று விளங்கும் பல்வேறு பௌத்த புனிதத்தலங்களை பார்வையிடும் வாய்ப்பை கீலாங் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
கர்டங் மடம் மற்றும் ஷஷுர் மடம் இப்பகுதியில் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. 900 ஆண்டுகள் பழமையான கர்டங் மடம், கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஷஷுர் மடாலயம் 17ம் நூற்றாண்டில் பூட்டான் மன்னர் நவங் நம்ஜியாலின் மத போதகரான சன்ஸ்காரின் லாமா தேவ கியட்ஷோவால் கட்டப்பட்டது. இப்பகுதியில் குரு கண்டல் மடம், தயுள் மடம், கெமுர் மடம் ஆகியன மற்ற புகழ்பெற்ற மடங்களாகும்.
கீலாங்கின் மற்ற புகழ்பெற்ற ஒரு சில இடங்கள், தண்டி, சிஸ்சு மற்றும் உதய்பூர் ஆகும். சந்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சிஸ்சு கிராமம் ஒரு முக்கியமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும்.
இளவேனில் மற்றும் இலையுதிர் பருவ காலத்தில் பார்வையாளர்கள் பலவகையான வாத்து இனங்களை காண முடியும். திரிலோக்நாத் மற்றும் மர்குல தேவி ஆகிய இரு கோவில்களின் மூலம் உதய்பூர் கிராமம் புகழ்பெற்று விளங்குகின்றது.
மேலும் சாகச விளையாட்டுக்களான மலையேறுதல், மீன்பிடித்தல், ஜீப் சவாரி, பாராக்ளைடிங், பனிச்சறுக்கு மற்றும் முகாமிடுதல் போன்றவற்றின் மூலம் கீலாங் பிரபலமான இடமாக திகழ்கிறது.
கீலாங்கிற்கு பயணம் செய்ய திட்டமிடும் பயணிகள் விமானம், ரயில் மற்றும் சாலை வழியாகச்செல்லலாம். கீலாங்கிற்கு நெருங்கிய விமான தளமாக உள்ள புந்தர் விமான நிலையம் கீலாங்கிலிருந்து 163 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த விமான நிலையம் புதுதில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது. மிக அருகில் உள்ள ரயில் நிலையமான ஜோகிந்தர் நகர் ரயில் நிலையம் கீலாங்கிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள் மனாலியிலிருந்து கிலாங்கிற்குச்செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.கோடைகால தொடக்கமான மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலுள்ள காலம் கீலாங்கிற்கு செல்ல உகந்த நேரம்.