ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கம்மம் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகராகவும் திகழ்கிறது. மாநிலத் தலைநகரமான ஹைதராபாதிலிருந்து இது 273 கி.மீ தூரத்தில் உள்ளது. சமீபத்தில் கம்மம் நகரைச் சுற்றியிருந்த 14 கிராமப்பகுதிகளையும் சேர்த்து ஒரு முனிசிபல் கார்ப்பரேஷனாக இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றுப்பின்னணி
உள்ளூர் பாரம்பரியக்கதைகளின்படி, ஆதியில் இந்த கம்மம் நகரம் இங்குள்ள நரசிம்மாத்ரி கோயிலை மையமாக கொண்டு ஸ்தம்ப ஷிகாரி என்றும், பின்னர் ஸ்தம்பாத்ரி என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 16 லட்சம் வருடங்களுக்கும் முற்பட்ட திரேதா யுகத்திலிருந்து இந்தக் கோயில் இருந்து வருவதாக புராண நம்பிக்கைகள் நிலவுகின்றன.
மலையின் உச்சியில் வீற்றுள்ள இந்த கோயிலுக்கு கீழ் தூண் போன்ற செங்குத்தான குன்று காணப்படுகிறது. இந்த மலைக்குன்றின் காரணமாகவே ‘கம்மம்’ என்ற தனது பெயரை இந்நகரம் பெற்றுள்ளது.
‘கம்பம் மேடு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின்னர் ‘கம்மமேடு’ என்று திரிந்து இறுதியில் ‘கம்மம்’ என்பதாகவே இந்நகரத்தின் பெயர் சுருங்கி நிலைத்துவிட்டது.
கிருஷ்ணா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்றான முன்னேரு எனும் அழகிய ஆற்றின் கரையில் இந்த கம்மம் நகரம் உருவாகியுள்ளது. ஆந்திரப்பிரதேச வரலாற்றில் இதற்கு ஒரு முக்கியமான இடமும் உண்டு.புகழ்பெற்ற கம்மம் கோட்டை கம்மம் நகரத்தில் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திலேயே முக்கியமான வரலாற்றுச்சின்னமாக அறியப்படுகிறது.
ஒரு மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கோட்டை வரலாற்று கால இந்தியாவின் மேன்மையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல் பலவித கட்டிடக்கலை அம்சங்களின் கலவையான கலைப்படைப்பாகவும் காட்சியளிக்கிறது. பல்வேறு ராஜவம்சங்களைச் சேர்ந்த மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டிருப்பதே இந்த கலவையான அம்சங்களுக்கு காரணம்.
புராதன காலத்திலிருந்தே கம்மம் நகரம் முக்கியமான தொழில் வணிகக் கேந்திரமாக விளங்கி வந்திருக்கிறது. பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டுள்ள இந்த பூமியில் கலவையான கலாச்சார அம்சங்களும், வரலாற்று அடையாளங்களும் காணப்படுகின்றன.
வேறுபட்ட மதங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வசிக்கும் இந்த நகரம் மத நல்லிணக்கத்துக்கான ஒரு சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. கம்மம் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படும் கோயில்களும் மசூதிகளும் அருகருகே அமைந்திருப்பது ஒரு விசேஷமான அம்சமாக கருதப்படுகிறது.
இந்தியாவில் அதிகமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் ஒன்றாக இந்த கம்மம் நகரம் பிரசித்தமாக அறியப்படுகிறது. கம்மம் நகரத்துக்குள்ளும் அதை சுற்றியும் பல முக்கியமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.
இவற்றில் கம்மம் கோட்டை, ஜமாலபுரம் கோயில் மற்றும் கம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர பாலாயிர் ஏரி, பப்பி கொண்டலு மலைகள் மற்றும் வய்யர் ஏரி போன்ற இயற்கை எழில் சுற்றுலா தலங்களும் கம்மம் நகரைச்சுற்றி அமைந்துள்ளன.
கம்மம் நகருக்கு விஜயம் செய்வதற்கு இதமான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கும் குளிர்காலமே ஏற்றதாக உள்ளது. வருடமுழுதுமே வெப்பப்பிரதேச பருவநிலை நிலவுவதால் குளிர்காலத்தில் அதிகக்குளிர் நிலவுவதில்லை.
ஆனால் கோடையில் அதிக வெப்பநிலை காணப்படுவதால் அப்பருவத்தை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தின்போது ஓரளவு வெப்பநிலை குறைந்தாலும் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் இதர பகுதிகளுடன் நல்ல முறையில் சாலைப்போக்குவரத்து மற்றும் ரயில் இணைப்புகளை கம்மம் நகரம் பெற்றுள்ளது. கம்மம் நகரத்தில் விமான நிலையம் இல்லை. இருப்பினும், அருகிலேயே ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் அமைந்திருப்பது வசதியாகவே உள்ளது.
இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கம்மம் நகரம் வழியாக செல்வதால் சாலைப்போக்குவரத்து வசதிகளுக்கும் குறைவே இல்லை. மாநில அரசு போக்குவரத்துக்கழகம் எல்லா முக்கிய ஆந்திர நகரங்களிலிருந்தும் பேருந்து சேவைகளை கம்மம் நகரத்துக்கு இயக்குகிறது.
மேலும் விசாகப்பட்டிணம் – ஹைதரபாத் ரயில் பாதையில் அமைந்திருப்பதால் கம்மம் நகரத்திற்கான ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் கிடைக்கின்றன.