ஆந்திராவிலுள்ள முக்கியமான சுற்றுலாஅம்சமாக கருதப்படும் பப்பி கொண்டலு எனப்படும் இந்த மலைத்தொடர் கம்மம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியின் பள்ளத்தாக்கு சமவெளிகளின் அழகு காஷ்மீர் பகுதியின் அழகுக்கு இணையாக புகழ் பெற்றுள்ளது.
கம்மம் நகரத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் இந்த மலைப்பகுதி காணப்படுகிறது. மேடக், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் அங்கமாகவும் இந்த மலைத்தொடர்கள் அமைந்துள்ளன.
ஒரு காலத்தில் இந்த மலைத்தொடர் ‘பிரிப்பு’ எனும் பொருள் தரக்கூடிய பப்பிடி கொண்டலு என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. கோதாவரி ஆற்றை இரண்டாக பிரிக்கும்படியாக அமைந்திருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் வேறு சிலரின் கருத்துப்படி, வானிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் தலைமுடி இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டதுபோன்று இந்த மலைத்தொடர் காட்சியளிப்பதால் இந்த பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பப்பி கொண்டலு மலைகளில் அமைந்துள்ள முனிவாட்டம் எனும் ரம்மியமான நீர்வீழ்ச்சியும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தமாக அறியப்படுகிறது. ஆதிவாசிகள் வசிக்கும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியானது நிசப்தம் நிலவும் சூழல் மற்றும் கன்னிமை கெடாத இயற்கை எழிலுடன் ஜொலிக்கிறது.
இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் அமைதியான குணம் உடையவர்களாகவும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்விதத்தில் இடைஞ்சல் தராதவர்களாகவும் விளங்குகின்றனர்.