ராஜஸ்தானில் பரந்து விரிந்து கிடக்கும் தார் பாலைவனத்தின் ஓரத்தில் கிம்சார் என்ற இந்த அழகிய குக்கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் முன்னொரு காலத்தில் டாக்கூர் சாம்ராஜ்யத்தின் சுதந்திர பேரரசாக விளங்கி வந்தது.
கிம்சார் கிராமத்தை சுற்றி என்னென்ன உள்ளன?
கிம்சார் நகரின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது நம்மை கிம்சார் கோட்டை கட்டப்பட்ட 16-ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்று விடும். இந்த கிம்சார் கோட்டை கட்டப்பட்ட நாள் முதல் இது எண்ணற்ற போர்களை கண்டிருக்கிறது. இதற்கான ஆதாரங்களை பயணிகள் இன்றும் கோட்டையின் சுவர்களில் பார்க்கலாம்.
கிம்சார் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காக கிம்சார் கோட்டை கட்டப்பட்டாலும், 18-ஆம் நூற்றாண்டில் இருந்து இங்கு அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதன்பிறகு 1940-ல் இங்கு ஜனானா என்ற பெண்கள் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்தக் கோட்டையின் சில பகுதிகள் இன்று பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிம்சார் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோட்டையின் மற்ற பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
கிம்சார் வரும் சுற்றுலாப் பயணிகள் ஓசியான் என்ற இடத்துக்கும் சென்று சுற்றிப் பார்க்கலாம். இந்த இடம் பற்பல தொன்மை வாய்ந்த ஜைன மற்றும் ஹிந்து கோயில்களுக்காக மிகவும் புகழ்பெற்றது.
அதோடு உங்களுக்கு நேரமிருந்தால் சாண்ட் டியூன்ஸ் வில்லேஜ் எனும் பாரம்பரிய ஹோட்டலுக்கு சென்று, பாலைவனத்தின் தங்க மணற்பரப்பில் ஒட்டக சவாரி செல்லலாம்.
கிம்சார் கிராமத்துக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாகௌர் திருவிழாவை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இந்த கால்நடை சந்தையில் பயணிகள் ஒட்டக பந்தயம், எருது பந்தயம் போன்றவற்றில் ஈடுபடுவதோடு நாட்டுப்புற இசை மற்றும் நடனங்களையும் கண்டு ரசிக்கலாம்.
கிம்சார் கிராமத்தை எப்படி அடைவது?
கிம்சார் கிராமத்தின் அருகாமை விமான நிலையமாக ஜோத்பூர் விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து ஜெய்ப்பூர், மும்பை, டெல்லி, உதைப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் கிம்சார் கிராமத்துக்கு வெகு அருகிலேயே ஜோத்பூர் ரயில் நிலையமும் அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் ஜோத்பூர் ரயில் அல்லது விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் வெகு சுலபமாக கிம்சார் கிராமத்தை அடைந்து விடலாம்.
அதுமட்டுமல்லாமல் கிம்சார் கிராமம் ஜோத்பூர்-நாகௌர்-பிக்கானேர் நெடுஞ்சாலையில் இருப்பதால் அருகாமை நகரங்களிலிருந்து கிம்சார் கிராமத்தை எந்த சிரமமுமின்றி அடையலாம்.
கிம்சார் கிராமத்தின் வானிலை
கிம்சார் கிராமத்தில் ஆண்டு முழுவதும் வறண்ட வானிலையே நிலவும். எனவே நவம்பரில் தொடங்கி மார்ச்சில் முடிவடையும் பனிக் காலமே கிம்சார் கிராமத்தை சுற்றிப் பார்க்க சிறந்த காலங்களாகும்.