எடப்பள்ளி பள்ளி என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த செயிண்ட் ஜார்ஜ் ஃபெரோனா சர்ச், கேரளாவின் முதல் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகும். கொச்சியிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள எடப்பல்லி எனும் சிறு நகரத்தில் இது அமைந்துள்ளது.
ஆறாம் நூற்றாண்டு வரை பின்னோக்கி நீளும் வரலாற்றுப்பின்னணியை இது கொண்டுள்ளது. ஆதியில் 594ம் ஆண்டில் எடப்பள்ளி ராஜா வழங்கிய சிறு நிலத்தில் இந்த தேவாயலத்தின் தோற்றம் உருவானதாக நம்பப்படுகிறது.
பின்னர் பல காலகட்டங்களில் பல புதுப்பிப்புகளையும் உருமாற்றங்களையும் இது சந்தித்துள்ளது. அன்னை மேரியின் பெயரில் ஆரம்பத்தில் அறியப்பட்ட இந்த சர்ச் பின்னர் செயிண்ட் ஜார்ஜ் எனும் பெயரில் அழைக்கப்பட்டது.
செயிண்ட் ஜார்ஜ் இங்கிலாந்தின் புனித மதகுருவாக அங்கீகரிக்கப்பட்டபின் இந்த பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த தேவாலயத்தில் செயிண்ட் ஜார்ஜ் ஒரு குதிரை மீதமர்ந்தபடி ஒரு டிராகனை ஈட்டியால் குத்துவது போன்ற சிலை காணப்படுகிறது.
கன்னி மேரி மற்றும் தேவதைகளை சித்தரிக்கும் ஓவியங்கள் இதன் சுவர்ப்பகுதியில் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்த தேவாலயத்தின் முக்கியமான திருவிழா கொண்டாடப்படுவதுடன் பல ஊர்வல நிகழ்ச்சிகளும் அச்சமயத்தில் நடத்தப்படுகின்றன. ஒன்பது நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் கலந்து கொள்கின்றனர்.