கொடுங்கல்லூர் நகரத்தின் மிக முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்று இந்த சேரமான் ஜும்மா மஸ்ஜித் ஆகும். இந்தியாவின் மிகப்பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படும் இது ‘மாலிக் பின் தினார்’ என்பவரால் 629ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
வரலாற்றுக்குறிப்புகளின்படி 1341ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது இந்த மசூதியின்பெரும்பகுதி சிதைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. நாம் தற்போது பார்க்கும் மசூதி வடிவம் பின்னாளில் புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பாகும்.
இந்த மசூதியின் கட்டிக்கலை அமைப்பு மிக விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கான காரணம் மிக வியப்புக்குரிய ஒன்றாகும். அதாவது இந்த மசூதியானது தென்னிந்திய ஹிந்து கோயில் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அணையா விளக்கு ஒன்றும் இந்த மசூதியின் மையப்பகுதியில் எரிந்த வண்ணம் உள்ளது. முக்கியமான மங்கல நாட்களின்போது மத பேதம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் எண்ணெய் கொண்டு வந்து இந்த அணையா விளக்கில் ஊற்றுகின்றனர்.
இந்த மசூதியிலுள்ள பித்தளை விளக்குகள் இதன் தோற்றத்துக்கு மேலும் பொலிவு சேர்க்கின்றன. கருங்காலி மரத்தால் ஆன பீட அமைப்பில் அற்புதமான அலங்கார குடைவு வேலைப்பாடுகளை இங்கு பார்க்கலாம். மெக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் வெண்பளிங்குக்கல் ஒன்று இந்த மசூதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய முக்கியமான வரலாற்றுப் பின்னணிகளை கொண்டுள்ள இந்த சேரமான் ஜும்மா மஸ்ஜித் கொடுங்கல்லூர் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும்.