கேரள பக்தர்களால் அதிகம் வணங்கப்படும் கோயில்களில் இந்த கூடல்மாணிக்யம் கோயிலும் ஒன்றாகும். இது கொடுங்கல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது. திருச்சூர் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் இந்த கோயில் உள்ளது. ராமரின் சகோதரர் பரதனுக்காக இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஒரே கோயில் எனும் பெருமையை இது பெற்றுள்ளது.
தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களையும் கைவினைக்கலை நுணுக்கங்களையும் இந்த கோயில் கொண்டுள்ளது. சுட்டம்பலம் எனப்படும் வட்டவடிவ கருவறையுடன் இது காட்சியளிக்கிறது.
கோயிலின் உட்புறச்சுவர்களில் சுவரோவியங்களும், கோயிலைச்சுற்றி நான்கு திருக்குளங்களும் காணப்படுகின்றன. கோயிலை ஒட்டியே ஒரு கூத்தம்பல மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கதகளி மற்றும் கூத்து போன்ற நிகழ்த்து கலை வடிவங்கள் அடிக்கடி அரங்கேற்றப்படுகின்றன.
ஏப்ரல்-மே மாதத்தில் இந்த கோயிலில் வருடாந்திர திருவிழா மிகச்சிறப்பாக 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின்போது அம்பாரி அலங்காரத்துடன் கூடிய யானைகளின் ஊர்வலம் பஞ்சரி மேளம் எனும் வாத்திய இசைப்போடு நடத்தப்படுவது பயணிகளால் வெகுவாக ரசிக்கப்படுகிறது.