கோலார் மாவட்டத்தில் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த விதுரஷ்வதா கோயிலாகும். இது கவுரிபதனூர் தாலுக்காவில் சிக்கபல்லாபூரை அடுத்து அமைந்துள்ளது. கவுரிபதனூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் சிக்கபல்லாபூரிலிருந்து 48 கி.மீ தொலைவிலும் இந்த கோயில் ஸ்தலம் அமைந்துள்ளது.இந்த கோயில் ஸ்தலத்தில் நிலவும் புராண ஐதீகத்தின்படி, துவாபரா யுகத்தின் போது மஹாபாரத காலத்தில் தர்மத்துக்கு பேர்பெற்ற விதுரர் ஒரு அரச மரத்தினை நட்டு அதனடியில் இருந்த கோயிலில் வழிபட்டு வந்ததாக புராண ஐதீகம் நிலவுகிறது.
‘அஷ்வதா’ என்பது சம்ஸ்கிருதத்தில் அரச மரத்தை குறிக்கும் சொல்லாகும். விதுரர் வணங்கிய அரச மரம் எனும் பொருளில் விதுரஷ்வதா என்று இந்த புனித ஸ்தலம் அழைக்கபடுகிறது. இந்த அரச மரத்தை போன்றே தொன்மையான நாக தேவதை கோயில் ஒன்றும் இந்த ஸ்தலத்தில் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் தோஷங்கள் தீர நாகதேவதைக்கு பிரத்யேக பரிகாரம் செய்து பூஜிக்கின்றனர்.
விசேஷ தினங்களில் பாம்புகள் இரவில் வந்து பக்தர்கள் அளிக்கும் பூஜை பொருட்களை ஏற்றுக்கொள்வதாக நம்பிக்கை நிலவுகிறது. இங்குள்ள அரச மரத்திற்கு பிணி தீர்க்கும் மருத்துவ குணாம்சங்களும் உள்ளதாக நம்பப்படுகிறது.1938ம் ஆண்டு இதே ஸ்தலத்தில் நடந்த சத்யாகிரக போராட்டத்தின் போது ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியை போன்றே போலிசார் கண் மூடித்தனமாக சுட்டதில் 10 சத்யாக்கிரஹிகள் உயிரிழந்தனர்.
அவர்கள் நினைவாக இங்குள்ள கோயிலின் பின்னால் ஒரு நினைவுச்சின்னமும் இங்கு எழுப்பப்பட்டுள்ளது. அந்த சரித்திர நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்றும் இந்த விதுரஷ்வதா ஸ்தலம் அழைக்கப்படுகிறது.
இப்படி தர்மா(விதுரர்), மர்மா(நாகதேவதை), தேசபக்தி வரலாறு போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஸ்தலம் விளங்குகிறது.இந்த ஸ்தலத்தில் உள்ள கோயிலில் சித்திரா பௌர்ணமியின்போது பிரம்மரத உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஸ்தலத்தின் கோயில் முன் திருமணங்களும் பக்தர்களால் அதிக அளவில் நடத்தப்படுகின்றன.