கோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்று பல அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கும் இந்த வளம் நிறைந்த நகரம் இந்தியாவின் தேசிய பெருமைகளுள் ஒன்று. மஹாலட்சுமிக் கடவுளால் சம்ஹாரம் செய்யப்பட்ட கோலாசுரன் என்பவனின் பெயரைக்கொண்டு இந்த நகரம் கோலாபூர் என்ற பெயரில் அழைக்கப்படுவதாக ஐதீகம் நிலவுகிறது.
ஆன்மீகத் திருத்தலம்
இருநூறு வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணியை இந்த நகரம் கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. சத்ரபதி தாராபாய் மன்னரால் இந்த நகரம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு அவருக்குப்பின் சத்ரபதி ஷாகு மஹாராஜாவால் சிறப்பாக ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சியும், சமூக மேன்மையும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட சிறந்து விளங்கும்படி சத்ரபதி ஷாகு மஹாராஜா பார்த்துக்கொண்டதாக சரித்திரம் கூறுகிறது. போஸ்லே வம்சத்தினரின் ஆட்சியின் போது கோலாப்பூர் நகரம் 19 துப்பாக்கி ராஜ்ஜியம் என்ற விசித்திரமான பெயரில் அழைக்கப்பட்டது என்பது ஒரு கூடுதல் சுவாரசிய தகவல்.
விஷ்ணு மஹாக் கடவுள் தனக்கும் தன் துணையான மஹாலட்சுமி கடவுளுக்கும் இஷ்ட நகரமாக இந்த கோலாப்பூரை ஏற்றுக்கொண்டதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது. கோலாப்பூரின் பிரதான ஆன்மீக அம்சமாக கருதப்படும் மஹாலட்சுமி கோயிலில் உள்ள தெய்வம் அம்பா தேவி என்று அழைக்கப்படுகிறது.
கோலாப்பூர் நகரமானது தக்ஷின் காசி என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. தொல்லியல் ரீதியாகவும், இந்திய கலாச்சார அடிப்படையிலும் இது ஒரு முக்கியமான நகரம் என்றால் அது மிகையாது. ஆன்மீகமும் நவநாகரீகமும் சரியான விகிதத்தில் கலந்து காணப்படுவதை வேறங்கும் இந்தளவுக்கு சிறப்பாக காண முடியாது.
எந்தெந்த இடங்களை தவறாமல் பார்க்க வேண்டும்?
கோலாப்பூரில் உள்ள ஒவ்வொரு கோட்டையும் சரித்திர பின்னணியை கொண்டிருப்பதால் அவை ஒவ்வொன்றும் உங்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவை. அதிலும் ஷாகு அருங்காட்சியகம் வரலாற்றியல் ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய ஒன்றாகும்.
கோலாப்பூரில் உள்ள குஸ்தி மைதான் என்ற இடத்தில் இன்றும் பாரம்பரிய கலை வடிவமான குஸ்தி நட்த்தப்படுகிறது. ஒரே சமயத்தில் 30000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தின் கலையம்சம் அக்கால கலைஞர்களின் திறமைக்கு சான்றாக விளங்குகிறது.
மேலும் இயற்கை ரசிகர்களுக்காக பல ஏரிகளும் கோலாப்பூரில் உள்ளன. ரங்கலா சௌபாத்தி எனும் அற்புதமான இடம் அவசியம் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும்.
அதுவும் குழந்தைகளுடன் பயணம் செய்யும் பட்சத்தில் இது தவறக்கூடாத சுற்றுலா அம்சமாகும். கோலாப்பூர் சென்றால் அங்கு கிடைக்கும் கோலாப்பூர் மிசல் எனும் உணவுப்பண்டத்தை சுவைத்து பார்க்காமலும், பிரசித்தி பெற்ற கோலாப்பூர் செருப்புகளையும் வாங்காமலும் திரும்பினால் அதை விட நஷ்டம் வேறு ஒன்றும் இல்லை.
இங்குள்ள கடைத்தெருக்களுக்கு ஷாப்பிங் செல்லும்போது விற்பனையாளர்களின் அன்பான உபசரிப்பும் பேச்சும் நம்மை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். பல்விதமான கைவினைப்பொருட்களும், தோல் பொருட்களும் கோலாப்பூரின் ஞாபகார்த்தமாக வாங்கிச்செல்வதற்கு இங்கு கிடைக்கின்றன.
காரசாரமான உணவுப்பிரியர் எனில் கோலாப்பூரில் கிடைக்கும் தம்படா ரசா எனும் பெயர் கொண்ட ஒரு குழம்பு வகையை நீங்கள் அவசியம் சுவைத்துப் பார்க்கவேண்டும். இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு உணவுப்பொருளிலும் கோலாப்பூர் மசாலா என்ற பிரத்யேக உள்ளூர் பொடி சேர்க்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
கோலாப்பூரைப் பற்றிய மற்றுமொரு சிறிய அதே சமயம் சுவாரசியமான ஒரு கதை என்னவெனில், இந்தியாவின் முதல் சினிமாப் படமான ராஜா ஹரிஷ்சந்திரா என்ற சினிமா இங்குதான் உருவாக்கப்பட்டது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் மராத்தி மொழி பேசுகின்றனர். குஜராத்தி மற்றும் மார்வாடி மொழியும் இங்கு கலந்து பேசப்படுகிறது.
எப்போது எப்படிச் செல்லலாம் கோலாப்பூருக்கு
கோலாப்பூர் நகமானது கடற்கரையோர தட்பவெப்ப நிலையையும், உள் நாட்டு தட்ப வெப்ப நிலையும் சேர்ந்த அற்புதமான சீதோஷ்ண நிலையை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக இங்கு அதிக வெப்பமும் காணப்படுவதில்லை, அதே சமயம் அதிக குளிரும் காணப்படுவதில்லை.
கோடைக்காலத்தில் எப்போதும் வெப்பநிலை 35°C க்கு மேல் உயர்வதில்லை. அதேபோல் ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் குளுமையாகவே இந்தப் பகுதி காணப்படுகிறது. ஆகவே வெள்ளம் பெருக்கெடுக்கும் மழைக்காலம் தவிர்த்த மற்ற எல்லாக் காலங்களிலும் விஜயம் செய்ய ஏற்ற சுற்றுலாத் தலமாக கோலாப்பூர் நகரம் திகழ்கிறது. பொதுவாக இங்கு வெப்பநிலை 15°C க்கும் 35°C க்கும் இடையில் காணப்படுகிறது.
கோலாப்பூர் நகரம் மும்பையிலிருந்து 387 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 240 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள எல்லா முக்கிய நகரங்களுடனும் இது விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. விமானம் மூலமாக சென்றால் உஜாலைவாடி விமான நிலையத்தில் இறங்கிக்கொள்ளலாம்.
ரயில் மூலமாக பயணிக்க விரும்பினால் தினமும் பல ரயில்கள் மும்பையிலிருந்தும், புனேயிலிருந்து கோலாப்பூருக்கு இயக்கப்படுகின்றன. காரிலும் கோலாப்பூருக்கு பயணிக்கலாம்.பயண நேரம் சுமார் எட்டு மணி நேரமாக இருக்கலாம்.
இது தவிர்த்து சாலை மார்க்கமாக செல்வதானால், அதிக அளவில் அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் மும்பை, புனே மற்றும் அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் கோலாப்பூருக்கு இயக்கப்படுகின்றன.
பலவிதமான சொகுசு கார்கள், கல்வி மையங்கள், பல அடுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், மசாலா உணவு, பொழுதுபோக்கு பூங்காக்கள், ஐ.டி தொழில் மையங்கள் என எல்லாம கலந்த கலவையாக கோலாபூர் காணப்படுகிறது.
இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்ற பெயர் பெற்ற கோலாப்பூர் நகரம் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரு நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இயற்கை, ஆன்மீகம், பாரம்பரியம் என்ற இந்தியாவின் மூன்று முக்கிய அம்சங்களும் இங்கு ஆச்சரியத்தக்க விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன. ஆகவே கண்டிப்பாக ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய கோலாகல நகரம் கோலாப்பூர் என்றால் அது மிகையில்லை.