கொல்லம் நகரிலிருந்து 27 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கருநாகப்பள்ளி எனும் சிறிய நகரம் தனது கோயில்களுக்காகவும், ஆன்மீக மையங்களுக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
முற்காலத்தில் இந்த நகரம் புத்த மார்க்கத்தினர் வசித்த இடமாகவும், புத்த கல்வி மையங்கள் இயங்கிய இடமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஒரு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை இந்த கருத்துக்கான ஆதாரமாக விளங்குகிறது.
இங்கு பக்தர்களால் அதிகமாக விஜயம் செய்யப்படும் பாடநாயர்குளங்கரா எனும் கோயிலில் சிவபெருமானும், ஷீகிருஷ்ணரும் அருகருகே வைத்து பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர இப்பகுதியில் உள்ள ஓச்சிரா கோயில் மற்றும் வலியக்குளங்கரா தேவி கோயில் என்பவையும் புகழ் பெற்ற கோயில்களாகும்.
போர்த்துகீசிய ‘பள்ளி’ எனப்படும் புராதன தேவாலயம் ஒன்றும் இங்குள்ளது. பண்டாரதுருத் சர்ச் என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் அக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்த போர்த்துகீசிய கடற்பயணிகளால் கட்டப்பட்டுள்ளது.
கடற்பயணத்தின்போது திசைமாறி தவித்த அவர்கள் பிழைத்து கரை சேர்ந்தால் ஒரு தேவாலயத்தை கட்டுவதாக ஆண்டவரிடம் வேண்டுதல் செய்துள்ளனர். இறுதியில் இந்த கருநாகப்பள்ளி எனும் கடற்கரைப்பகுதியில் அவர்கள் பயணித்த கப்பல் கரை சேர்ந்தபின் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு இந்த தேவாலயத்தை அதே இடத்தில் நிர்மாணித்துள்ளனர்.