கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் காப்பி பயிரிடப்படுவது துவங்கக் காரணமாக இருந்த M.D. காக்பர்ன் என்பவரது மனைவியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. கோத்தகிரியில் முதலில் குடியேறியவர்களில் காக்பர்ன் தம்பதியரும் அடங்குவர்.
இது 250 அடி உயரத்திலிருந்து இரு நிலைகளாக விழும் நீர் வீழ்ச்சியாகும். மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் அரவேணு என்ற இடத்தில உள்ளது. இந்த அருவியின் முழுமையான காட்சியைக்காண டால்பின் மூக்கு வியூ பாயிண்டிற்கு செல்ல வேண்டும்.
அருவியின் மேற்பகுதிக்கு சாலை வழியாகவும் செல்லலாம். இது நீலகிரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது.
"கேத்தேஹாட ஹள்ளா " என்பது உள்ளூரில் வழங்கும் மொழியில் கேத்தரின் நீர் வீழ்ச்சியின் பெயராகும். இது "பள்ளத்தாக்கின் ஆறு" என்று பொருள் படும்.சாலை வழியாக எளிதில் அடைய முடியும் என்பதால் கோத்தகிரிக்குச் செல்லும் எவரும் தங்கள் சொந்த வாகனத்திலேயே செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.