கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான கொட்டாரக்கரா, அரண்மனைகள் மற்றும் கோயில்களுக்காக மிகவும் புகழ்பெற்றது. மலையாள மொழியில் 'கொட்டாரம்' என்றால் 'அரண்மனை' என்றும் 'கரா' என்றால் நிலம் என்றும் அர்த்தம். இதன் காரணமாக 'அரண்மனைகள் நிறைந்திருக்கும் நிலம்' என்ற பொருளில் இந்த நகரம் கொட்டாரக்கரா என்று அழைக்கப்படுகிறது.
திரிவிதாங்கூர் மகாராஜாக்களின் ஆளுமையின் கீழ் இருந்த கொட்டாரக்கரா நகரம் அந்த காலங்களில் இளயிடத்து ஸ்வரூபம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டு வந்தது. 14-ஆம் நூற்றாண்டில் முதல் அரண்மனை கட்டப்பட்ட கொட்டாரக்கரா நகரில் இப்போது ஏழு அரண்மனைகளின் சிதைவுகளை நீங்கள் பார்க்கலாம்.
கதக்களியின் பிறப்பிடம்
கதக்களி நடனம் உருவான இடமாக கொட்டாரக்கரா நகரம், கேரளாவின் நவீன கலாச்சார வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த நடனம் உருவான வரலாறு கொட்டாரக்கரா ராஜா மற்றும் கோழிக்கோடு ராஜா ஆகியோர் இடையே ஏற்பட்ட போட்டியை சுவையாக சொல்கிறது.
அதாவது ராமனாட்டம் என்ற பெயரில் கொட்டாரக்கரா தம்புரான் கண்டுபிடித்த நடனம்தான் பிற்பாடு நவீன கதக்களியாக உருவம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் கதக்களி நடனத்தை சாதாரண மனிதன் வரை கொண்டு சென்ற பெருமை கொட்டாரக்கரா தம்புரானையே சேரும்.
இப்படியாக கொட்டாரக்கராவின் செழுமையான கலை வரலாற்றின் தாக்கத்தை அதன் கலாச்சாரத்திலும், மக்களின் வாழ்வு முறையிலும் தெளிவாக உணர முடியும்.
வசீகரிக்கும் அற்புதங்களின் கலவை!
கொட்டாரக்கரா நகரில் கோயில்கள், தேவாலயங்கள், அரண்மனைகள், வர்த்தக மையங்கள் என்று சுற்றிப் பார்த்து ரசிக்க ஏராளம் உள்ளன. அதிலும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில் மற்றும் ஸ்ரீ மணிகண்டேஸ்வர மஹாதேவ ஆலயத்தில் பயணிகள் மற்றும் பக்தர்கள் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம்.
இவைதவிர பத்தனபுரம், கொட்டாரக்கரா அரண்மனை மற்றும் கிழக்கேதெருவு ஆர்தோடக்ஸ வலியாப்பள்ளி ஆகிய இடங்களும் கொட்டாரக்கரா நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.
கொட்டாரக்கரா நகரம் கொல்லம் நகரிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருப்பதால் சாலை மற்றும் ரயில் மூலமாக மிகவும் சுலபமாக அடையலாம்.
இந்த நகரில் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையே நிலவுவதால் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் கொட்டாரக்கரா நகருக்கு சுற்றுலா வரலாம்.