திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள வலியத்துறா கடற்பாலம் ஒரு பிரசித்தமான சுற்றுலா ஸ்தலமாக அறியப்படுகிறது. வலியத்துறா எனும் இடத்தில் உள்ளதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.
ஒரு காலத்தில் கேரளாவின் தெற்குக்கடற்கரையில் இருந்த முக்கியமான துறைமுகமாக இது விளங்கியிருக்கிறது. பின்னர் கொச்சி நகரமானது எல்லா கடல்சார் செயல்பாடுகளுக்குமான கேந்திரமாக மாறிய பிறகு இந்த இடம் நாளடைவில் தன் பொலிவை இழந்துவிட்டது. தற்சமம் வலியத்துறா ஒரு மீன்பிடி கிராமமாக மட்டுமே சுருங்கிவிட்டது.
214 மீட்டர் நீளமுடைய வலியத்துறா கடற்பாலம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இதன் அருகில் பெரிய சேகரிப்புக்கூடங்களும் காணப்படுகின்றன. வலியத்துறா பரபரப்பாக இயங்கிய காலத்தில் இவை வாணிபப்பொருட்களால் நிரம்பி வழிந்திருக்கின்றன.
ஆழம் குறைவான நீர்ப்பரப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த துறைமுகப்பாலம் அக்காலத்தில் கப்பல்களிலிருந்து பொருட்களை படகு மூலம் கொண்டுவந்து கரைக்கு சேர்ப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.
தற்போது பலவீனமடைந்துவிட்ட இந்த பாலப்பகுதியை மீனவர்கள் படகுகளை கடலில் புகுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் இப்பாலத்தில் தற்சமயம் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.