திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரி இந்த வெள்ளயானி ஏரியாகும். உள்ளூர் மக்களால் இது வெள்ளயானி காயல் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரிப்பகுதி உள்ளூர் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும் பெரிதும் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது. கோவளம் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் மறக்காமல் இந்த ஏரி ஸ்தலத்துக்கும் விஜயம் செய்வது நல்லது.
நீல நிறத்தில் ஒளிரும் ஸ்படிகம் போன்று தூய்மையான நீர்ப்பரப்பைக் கொண்டுள்ள இந்த ஏரி பார்த்தவுடன் பரவசமூட்டும் அழகோடு காட்சியளிக்கிறது. நிலா வெளிச்சத்தில் இதன் அழகு இன்னும் மயக்கமூட்டும் விதத்தில் ஒரு கனவுலகம் போன்று தோற்றமளிக்கிறது. மாலை கவிழ்ந்து இரவு வரை காத்திருந்து பயணிகள் இதன் அழகுச்சூழலை தரிசித்து மயங்குகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையின்போது இந்த ஏரிப்பகுதியில் படகுப்போட்டியும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான ரசிகர்களும், உள்ளூர் மக்களும், பயணிகளும் அச்சமயம் இங்கு திரள்கின்றனர். ஓணம் பண்டிகையின்போது கோவளம் அல்லது திருவனந்தபுரத்திற்கு அருகில் இருந்தால் நீங்கள் இந்த படகுப்போட்டியை பார்த்து ரசிக்க மறக்காதீர்கள்.