மனச்சிரா ஸ்கொயர் என்று அழைக்கப்படும் இந்த பிரசித்தமான பொழுதுபோக்கு ஸ்தலம் மனச்சிரா எனும் குளத்தை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சதுக்கமாகும். 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் இயற்கையான நீர்ச்சுரப்பின் மூலமே நீர் நிரம்பிக்காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் மாலை நேரத்தை ஓய்வாக பொழுதுபோக்குவதற்கு இந்த சதுக்கப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.
14ம் நூற்றாண்டில் காலிகட் பகுதியை ஆண்ட ஜாமோரின் மான விக்ரமா என்ற மன்னரால் இந்த குளம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜ குடும்பத்தினர் நீராடுவதற்கான இந்தக்குளம் வெட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட லாடரைட் எனும் விசேஷமான கற்களைப் பயன்படுத்தி இரண்டு அரண்மனைகள் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னாளில், 19ம் நூற்றாண்டில் நீராடுதல் போன்ற மனித மாசுகள் தடை செய்யப்பட்டு இந்த குளத்தின் நீர் நகரத்தின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த குளத்தை ஒட்டியுள்ள பூங்காப்பகுதி 1994ம் ஆண்டில் காலிகட் நகராட்சி அமைப்பினால் கட்டப்பட்டுள்ளது. அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிகள் மற்றும் பூச்செடிகளுடன் காட்சியளிக்கும் இந்த சதுக்கத்தில் இசை நீரூற்றுகள் மற்றும் எண்ணற்ற மரங்கள் காணப்படுகின்றன.
இரு புறமும் திப்பு சுல்தான் மன்னரின் பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ள ஒரு அலங்கார தோரண வாயில் மற்றும் ஒரு பாரம்பரிய எழிலுடன் காட்சியளிக்கும் நூலகம் ஆகியவையும் இந்த சதுக்கத்தில் இடம் பெற்றுள்ளன. மிட்டாய் தெருவு என்றழைக்கப்படும் எஸ். எம் சாலை இந்த சதுக்கத்துக்கு அருகிலேயே உள்ளது.