கேரளாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த தலி கோயில் கோழிக்கோடு நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. கோழிக்கோடு மற்றும் மலபார் பிரதேசத்தின் வரலாற்றில் இந்த கோயில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
ஜமோரின் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ‘ரேவதி பட்டதானம்’ எனப்படும் ‘அறிஞர் மகாசபை’ யானது மன்னர்களின் ஆதரவுடன் வருடாந்தரமாக கூட்டப்பட்டுள்ளது. இது சமூக-வரலாற்று-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.
சிவபெருமானை மூலவராகக்கொண்ட இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். ஒரு கருவறை, விளக்குத்தூண்கள், பிரம்மாண்ட வாயிற்கதவு, யானைகளுக்கான மேடை மற்றும் சிறு தெய்வங்களின் சிலைகள் ஆகியவை இக்கோயிலில் இடம்பெற்றுள்ளன.
கோயிலின் கருவறையானது ஒரு தேரின் வடிவத்தில் செதுக்கப்பட்டு பல்வித சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான கேரளபாணி கோயில் மரபுப்படி இது மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தினமும் இக்கோயிலில் நடத்தப்படும் பலவித விசேஷ பூஜைகளில் உள்ளூர் மக்கள் பக்தியுடன் கலந்துகொள்கின்றனர். ‘விஷு’ எனப்படும் மலையாள வருடப்பிறப்பின்போது இங்கு 7 நாட்களுக்கு திருவிழா வைபவங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த கோயில் ஸ்தலத்தில் கமழும் தெய்வீகச்சூழல் பயணிகளின் மனதையும் லேசாக்கி ஆன்மிக பலத்தை அளிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.