தமிழ் நாட்டின் 30வது மாவட்டமான கிருஷ்ணகிரி எண்ணற்ற கருப்பு கிரானைட் மலைகளையுடைய நிலப்பகுதிகளுக்கு சொந்தமான நகரமாகும். 5143 சகிமீ பரப்பளவுடைய இந்த புதிய மாவட்டம் சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு பார்வையிடங்களை தன்னகத்தே கொண்டுள்ள இடமாகும். KRP அணைக்கட்டினை முதன்மையான பார்வையிடமாக கொண்டிருக்கும் கிருஷ்ணகிரியில் மேலும் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோவில்கள், பூங்காக்கள், கோட்டைகள் மற்றும் நினைவிடங்கள் ஆகியவை திணறடிக்கும் இயற்கைச் சூழலில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.
மாம்பழ நகரம்
முக்கனிகளில் முதன்மையானதாகவும், 'பழங்களின் அரசன்' என்றும் கருதப்படும் மாம்பழம் அதிகமாக விளையும் மாவட்டமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது. 150-க்கும் மேற்பட்ட மாம்பழ பண்ணைகளை கொண்டுள்ள சாந்தூர் கிராமம் தமிழ் நாட்டின் மாம்பழ களஞ்சியம் என்றால் மிகையாகாது. இங்கு பெருமளவில் விளையும் மாம்பழங்கள் காய்த்து மரங்களில் தொங்குவதை பார்க்கும் போது கண்கள் களைப்பை மறந்து விடும்.
அறுவடைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தால், நன்கு பழுத்த, சுவையான கொழுத்த மாம்பழங்கள் குவிந்து கிடப்தைக் காண முடியும். கிருஷ்ணகிரியில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாம்பழ கண்காட்சியில் பார்வையாளர்களும் மற்றும் விவசாயிகளும் மாம்பழ வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.
எண்ணற்ற வகைகள் மற்றும் மாறுபட்ட பல்வேறு வண்ணங்களையுடைய மாம்பழங்கள் இயற்கையின் மீதான நமது மதிப்பை மேலும் உயர்த்தும். மாம்பழங்களை சாப்பிட விரும்புவோருக்கும் ஒரு சிறந்த விருந்தினை இந்த கண்காட்சி அளிக்கும் என்பதில் வியப்பில்லை.
கிருஷ்ணகிரி நகரைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் - கோட்டைகளும், கோவில்களும்!
தமிழ் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே பல்வகை மத நம்பிக்கைகளின் கலாச்சார மையமாக கிருஷ்ணகிரி நகரம் விளங்குகிறது. இந்த நகரத்தைச் சுற்றிலும் பல்வேறு பழமையான கோவில்களும் தொடர்ச்சியாக உள்ளன.
கிருஷ்ணகிரியை நுளம்பர்கள், சோழர்கள், கங்கர்கள், பல்லவர்கள், ஹோய்சளர்கள், விஜயநகரம் மற்றும் பீஜப்பூர் அரசர்கள், மைசூர் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டு வந்திருக்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய காலங்களில் கட்டிய கோவில்கள் அவர்களுடைய கட்டிடக்கலைக்கும், ஆன்மீக வழிபாடுகளுக்கும் இன்றும் சான்றாக திகழ்கின்றன.
அவற்றில் வேணுகோபால் சுவாமி கோவில், அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் கோவில், ஸ்ரீ பார்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்தம், சி.எஸ்.ஐ கிறித்தவ சர்ச், பாத்திமா சர்ச் - வின்சென்ட் டி பால் பாரிஷ், (இது ஒரு பழமையான ரோமன் கத்தோலிக்க திருச்சபையாகும்), கிருஷ்ணகிரி சத்யசாய் சமிதி அமைப்பு, ஜெயின் தியான மண்டபம், கிருஷ்ணகிரி தர்ஹா, சையத் பாஷா மலை மசூதி ஆகியவை கிருஷ்ணகிரி வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முதன்மையான இடங்களாகும்.
கிருஷ்ணகிரியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் போது முருகப் பெருமானை வணங்குவதற்காக நடக்கும் காவடி ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பழைய பேட்டையில் உள்ள தர்மராஜா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 'பாரதம்' நிகழ்ச்சி மகாபாரதத்தின் நினைவுகளை நமக்கு முன் நிறுத்தும் முயற்சியாகும்.
தெருக்கூத்து எனப்படும் கூத்துக்கலை நடத்தப்படும் இடமாகவும் இந்த கோவில் கருதப்படுகிறது. பழமையான கலையான தெருக்கூத்து சமூக விழிப்புணர்வினை பொழுது போக்கு வாயிலாக சாதராண மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஊடகமாகும்.
பழமையும், புதுமையும் அருகருகே அமர்ந்து அமைதியைத் தேடும் அற்புத இடமாக கிருஷ்ணகிரி உள்ளது. நவீன கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இந்த சிறிய மாவட்டத்தில் இயற்கையுடன் சேர்ந்து அமைந்திருப்பது பார்ப்பவருக்கு ஏதாவதொரு விஷயத்தை அளிக்கும் வகையில் இருக்கும்.
ஒரு பக்கத்தில் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வேளைகளில், மறுபுறமிருக்கும் மாம்பழம் பதனம் செய்யும் தொழிற்சாலைகள் இங்கிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் இடங்களாக உள்ளன.
இந்தியாவின் நுண்வடிவமைப்பாக பார்க்கப்படும் கிருஷ்ணகிரி நகரம், தொடர்ச்சியாக வளரும் நகரமாகவும், காலத்திற்கேற்ப மாறும் நகரமாகவும் விளங்கி வருகிறது.
தற்பொழுது விரிவாக்க வேலைகள் செய்து கொண்டிருக்கும் KRP அணைக்கட்டு இந்நகரம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளருவதை தெளிவாக காட்டும். KRP அணைக்கட்டுடன் சேர்ந்து, கெலவாரபள்ளி நீர்த்தேக்கமும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் பார்வையைக் கவரும் இடங்களாக உள்ளன.
விண்வெளியிலிருந்து வந்த பார்வையாளர்கள்
12 செப்டம்பர் 2008-ம் நாள் கிருஷ்ணகிரி நகரத்தின் மீது பொழிந்த விண்கற்கள் மழையானது உள்ளூர் மக்களை ஏதோ ஒரு குண்டு வெடிப்புதான் நிகழ்ந்து விட்டதோ என்று அச்சப்படச் செய்தது.
இந்த விண்கல் மழையுடன் சேர்த்து அடர் கருமை நிற புகையும் மற்றும் ஊளையிடுவது போன்ற சத்தங்களும் இந்த பகுதியில் வசித்து வந்த விவசாயிகளுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் தானோ இது? என்று எண்ணுமாறு முதுகுத் தண்டை ஜில்லிடச் செய்யும் அனுபவத்தைத் தந்து விட்டன.
கிராமவாசிகள் வானத்திலிருந்து ஆர்ப்பரிக்கும் வேகத்தில், ஆக்ரோஷமாக விண்கற்கள் தங்கள் வீட்டினருகே வந்து விழுந்ததை பார்த்ததாக கூறினார்கள். இந்த விண்கற்கள் விழுந்த இடங்களில் 3 அடி ஆழமும் மற்றும் 5 அடி அகலமும் உடைய க்ரேட்டர் பள்ளங்கள் ஏற்றபட்டுள்ளன.
மெட்டீயோரிடிக்கல் புல்லட்டின் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி இந்த விண்கல் மழைக்கு 'சூலகிரி விண்கல்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கற்கள் மற்றும் விண்கல் பள்ளங்கள் விண்வெளி அமைப்புகளை ஆராய்ச்சி நோக்கத்துடன் கவனித்து வரும் ஆர்வலர்களுக்கு அருமையான தீனியாக அமையும்.
கிருஷ்ணகிரி சாலை மற்றும இரயில் வழியாக மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வருடத்தின் ஒவ்வொரு நாளிலும், வரும் எந்தவொரு சீசனிலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிக்கு ஏதாவதொரு நல்ல அனுபவத்தை தரும் ஒரு பல்வகை சுற்றுலாத் தலமாக கிருஷ்ணகிரி விளங்குகிறது.