உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வாலுடன் சேர்ந்த நிர்வாகப் பிரிவுதான் குமாவோன். உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சம்பவாட், நைனிடால், அல்மோரா, பாகேஸ்வர், பித்தோரகார் மற்றும் உத்தம்சிங் நகர் ஆகியவை குமாவோன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்டவங்களாகும். இந்த பிரதேசத்தின் வடக்கில் திபெத், தெற்கில் உத்திரப் பிரதேசம், கிழக்கில் நேபாளம் மற்றும் மேற்கில் கார்வால் ஆகியவை சூழ்ந்துள்ளன. குமாவோனி மொழியை உள்ளூர் மொழியாக பயன் படுத்தும் குமாவோன் பகுதியின் முக்கிய நகரங்களாக நைனிடால், அல்மோரா, ஹல்ட்வானி, முக்தேஸ்வர், பித்தோரகார், காஷிபூர், ருத்ராபூர் மற்றும் ரானிகெட் ஆகிய இடங்கள் உள்ளன.
இந்து கடவுள் மகா விஷ்ணு ஆமை வடிவில் எடுத்த ஒரு அவதாரமான 'கூர்மாவதாரம்' என்று பொருள் படும் 'கூர்மாஞ்சால்' என்ற வார்த்தையிலிருந்த இந்த பெயர் வந்தது.
இந்த இடம் குமாவோன் ரெஜிமன்ட் என்ற இராணுவப் பிரிவையுடைய சிறப்பான இடமாகும். நந்த தேவி மேளா, சைய்டி மேளா, ஹிலிஜட்ரா, பக்வால், உத்தராயனி மேளா மற்றும் கன்டாலி ஆகிய திருவிழாக்கள் மற்றும் ஏராளமான கண்காட்சிகளை வழங்கி மகிழ்விக்கும் இடமாகவும் குமாவோன் உள்ளது.
இந்தியாவில் பிரிட்டடிஷார் ஆட்சிக் காலத்தில கட்டப்பட்ட 13 குடில்களை மட்டுமே கொண்டுள்ள அப்போட் மலை என்ற அழகிய மலையும் இங்கே உள்ளது. பனியைப் போர்த்தியுள்ள மலைகள் மற்றும் அடர்த்தியான ஓக் மற்றும் தியோதர் மரங்களுக்கு நடுவே திரு.ஜான் அப்போட்-ன் மாளிகைகள் அமைந்துள்ளன.
இதுமட்டுமல்லாது 6191 மீ உயரத்தில் அமைந்துள்ள ஆதி கைலய மலைகளையும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரசித்திட முடியும். இந்த மலை பாபா கைலாஷ், ஜோங்லிங்கோங் சிகரம் மற்றும் லிட்டில் கைலாஷ் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது.
திபெத்திலுள்ள கைலாய மலையின் தோற்றத்தைப் போலவே, 'ஓம்' (OM) அல்லது 'அம்' (AUM) என்ற வடிவத்தில் பனி படர்ந்திருக்கும் மலைகளின் காட்சிகளை கொண்டிருக்கும் அற்புதமான இடமாக குமாவோன் உள்ளது.
குடல் மட்டத்திலிருந்து 3870 மீட்டர்களில் தொடங்கி 5500 மீட்டர்கள் வரை நெடுநெடுவென உயர்ந்து செல்லும் மிலம் பனியாறு ஓடும் இடமாகவும் குமாவோன் உள்ளது.
சுமார் 37 ச.கிமீ-களில் விரிந்திருக்கும் இந்த பனியாறு குமாவோன் பகுதியிலேயே மிகப்பெரியதாகும். இந்த பனியாற்றை அடைய முன்சியாரி என்ற இடத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
மிகவும் அழகுற காட்சி தரும் நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் கிராமங்களை கடந்து செல்லுமாறு அமைந்துள்ள இந்த மலையேற்றப் பாதை சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
3627 மீ உயரத்தில் உள்ள பனிமலையான பின்டாரி குமாவோன் பகுதியின் மற்றுமொரு அழகிய பார்வையிடமாகும். பாகேஸ்வர் மாவட்டத்தில் நந்தகோட் மற்றும் நந்த தேவி சிகரங்களுக்கு மத்தியில் இந்த பனிமலை அமைந்துள்ளது. தெற்கு நோக்கிப் பாயும் பின்டாரி ஆற்றின் ஆதாரமாக பின்டாரி பனிமலை உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 2298 மீ உயரத்தில் அமைந்துள்ள முன்சியாரி மற்றுமொரு பிரம்மாண்டமான சுற்றுலா தலமாகும். இமயமலையில் அமைந்திருக்கும் இந்த இடத்திலிருந்து திரிசூல், நந்த தேவி மற்றும் பஞ்சசூலி சிகரங்களைக் காண முடியும். பைன், தியோதர் மற்றும் ரோடோடென்ட்ரான் என்ற பெரிய மலர்களைத் தாங்கியுள்ள பசுமையான புதர்களால் சூழப் பட்டு இந்த இடம் மேலும் அழகுற அமைந்துள்ளது.
இந்த இடத்தை சுற்றிப் பார்க்கும் வேளையில் பல்வேறு வகைகளில் வித்தியாசமான தாவர மற்றும் உயிரினங்களையும் நீங்கள் காண முடியும். நந்த தேவி சிகரம், ரலம், மிலம் மற்றும் நமிக் ஆகிய இடங்களுக்கு மலையேற்றம் செல்வதற்கான தளமாகவும் முன்சியாரி உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பனிச்சறுக்கு விளையாட்டையும் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் தூண்டி விடப்பட்டுள்ளன.
பின்டார் பள்ளத்தாக்கிற்கு மேற்கில் உள்ள சுந்தர்துங்கா என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மாட்கோட்டி மற்றும் சுக்ராம் ஆகிய இரண்டு பனிமலைகளை காண முடியும். 'சுந்தர்துங்கா' என்ற வார்த்தைக்கு 'அழகிய கற்களையுடைய பள்ளத்தாக்கு' என்று பொருளாகும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள டேராடூனின் பட்னாகர் விமான நிலையம் குமாவோனுக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும்.
குமாவோனுக்கு அருகிலுள்ள இரயில் நிலையமான கத்கோடம் இரயில் நிலையம் லக்னோ, ஹெளரா மற்றும் டெல்லி போன்ற பல்வேறு நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சாலை வழியாக செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்டிற்கு அருகிலுள்ள நகரங்களிலிருந்து பேருந்துகளிலும் செல்லலாம். குமாவோனின் பருவநிலை வருடம் முழுவதுமே மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
எனினும், குமாவோனுக்கு குளிர் காலத்தில் வரும் சுற்றுலா பயணிகள் தேவையான கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்வது நலம். மேலும், மழைக்காலத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள் தேவையான மழைக்கால உபகரணங்களை கொண்டு வருவதும் பரிந்துரைக்கப்படுகிறது.