கண்ணைக்கவரும் அழகோடு காட்சியளிக்கும் இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி குமரகம் அருகிலேயே உள்ளது. கோட்டயம் நகரத்திலிருந்து 18கி.மீ தொலைவில் குமரகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி இயற்கைச்சூழலில் நடைபயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற இடமாகும்.
இந்த நீர்வீழ்ச்சியில் 100 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்ட பாறை அமைப்பின் வழியாக நீர் சரியும் காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் திணற வைக்கிறது. பரந்த ரப்பர் மரக்காடுகளின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் குடும்பத்தோடு சிற்றுலா செல்வதற்கும் உல்லாச பிக்னிக் பொழுது போக்குகளுக்கும் இந்த ஸ்தலம் ஏற்றதாகும். இயற்கையின் தூய்மை மிளிரும் இச்சூழலானது இயற்கை ரசிகர்களையும் புகைப்பட ஆர்வலர்களையும் வசியப்படுத்தி விடுகிறது.
குமரகம் நகரத்திலிருந்து நடக்கும் தூரத்திலேயே உள்ள இந்த நீர்வீழ்ச்சியின் சத்தத்தை வெகு தூரத்திலிருந்தே பயணிகள் கேட்க முடியும். மழைக்காலத்தில் படிகம் போன்ற புதிய நீரானது வேகத்துடன் இந்த நீர்வீழ்ச்சியில் வழிகிறது. மழைக்காலம் முடிந்த பின், கோடை துவங்குவதற்கு முன் உள்ள இடைப்பட்ட காலம் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்க ஏற்ற பருவமாகும்.