குமரகம் பறவைகள் சரணாலயம் அல்லது வேம்பநாட் ஏரி பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம் வேம்பநாட் ஏரியில் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது.
உப்பங்கழி ஏரியை பின்புலமாக கொண்டு காட்சியளிக்கும் இந்த இயற்கைப்பிரதேசத்தின் அழகு பார்வையாளர்களை பரவசமூட்டும் இயல்புடையதாகும். பலவிதமான புலம்பெயர் பறவைகள் வருகை தரும் பகுதி என்பதால் பறவை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த சரணாலயத்தை விரும்பி தேடி வருகின்றனர்
14 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த சரணாலயப்பகுதிக்கு இமாலயம் மற்றும் சைபீரியா போன்ற தொலைதூரங்களிலிருந்தும் புலம்பெயர் பறவைகள் குறிப்பிட பருவங்களில் விஜயம் செய்கின்றன.
குயில், நீர்க்கோழி, நீர்க்காகம், கொக்கு, ஆந்தை, நாரை, கானாங்கோழி, வானம்பாடி, பாம்புத்தாரா, தாழைக்கோழி, சைபீரிய நாரை, கிளி மற்றும் ஈப்பிடிப்பான் போன்ற பறவைகள் இந்த சரணாலயத்தில் அதிகமாக வசிக்கின்றன.
சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த சரணாலயத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது சிறந்தது. நிசப்தம் நிலவும் இயற்கை சௌந்தர்யம் விரிந்துள்ள ஏரிப்பரப்பின் மேல் பறவைகள் கூட்டம் கூட்டமாக பறப்பதை அப்போது பார்த்து ரசிக்கலாம்.
அது மட்டுமல்லாமல், படகு வீடுகள் அல்லது மோட்டார் படகுகளில் பயணித்தபடியே கரைப்பகுதியிலுள்ள பறவைகளையும் இயற்கை எழிலையும் ரசிக்கலாம். வழிகாட்டிகளுடன் கூடிய நடைச்சுற்றுலாவும் சரணாலயத்தின் உள்ளேயே பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் அழகை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்பதை நேரில் விஜயம் செய்தால் புரிந்துகொள்ளலாம்.
இதர தகவல்கள்:
பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
நுழைவுக்கட்டணம்: 5 ரூபாய் (இந்திய பயணிகளுக்கு) 45 ரூ வெளிநாட்டுப் பயணிகளுக்கு)
சுற்றுலா வழிகாட்டி கட்டணம்: 10 – 200 ரூபாய்
படகுச்சவாரி கட்டணம்: 200 -250 ரூ (இரண்டு மணி நேரத்துக்கு)
உகந்த பருவம்: நவம்பர் - பிப்ரவரி
உகந்த நேரம்: அதிகாலை நேரம் மற்றும் பொழுது சாயும் நேரம்