குமரகம் சுற்றுலாத்தலத்திற்கு அருகிலேயே உள்ள பத்திரமண்ணல் எனும் இந்த சிறிய தீவு அனந்த பத்மநாபன் தோப்பு அல்லது பத்திர தோப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
வேம்பநாட் ஏரித்தேக்கத்தில் 10 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட தீவுத்திட்டாக காணப்படும் இது கோட்டயம் மற்றும் ஆலெப்பி மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. குமரகத்திலிருந்து ஃபெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகு மூலம் இந்த தீவுக்கு செல்லலாம்.
குமரகம் உப்பங்கழிகளின் வழியாக படகில் பத்திரமண்ணல் நோக்கி பயணிக்கும் அனுபவம் ஒன்றே பயணிகளை மயங்கவைப்பதற்கு போதுமானதாக உள்ளது. இந்த தீவில் 50 வகையான புகலிடப்பறவைகளும், 91 வகையான வசிப்பிடப்பறவைகளும் காணப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பச்சை மரகதம் போன்று ஜொலிக்கும் இந்த தீவு தன் வெண் மணற்பரப்பு, மாசுபடாத இயற்கை எழில் மற்றும் நிசப்தமான சூழல் போன்றவற்றால் பயணிகளை வசியப்படுத்துகிறது.
யாருமே வசிக்காத இந்த வசீகரத்தீவு உங்களை சாந்தப்படுத்தி புத்துணர்ச்சியூட்டும் இயல்புடன் காட்சியளிக்கிறது. நாலாபுறமும் நீரால் சூழப்பட்டுள்ள இந்த சிறு தீவு புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் மிகவும் விரும்பும் இயற்கைக்காட்சிகளை ஏராளமாக கொண்டுள்ளது.