குமரகத்திற்கு அருகிலுள்ள ஒரு முக்கியமான ஆன்மீகஸ்தலம் இந்த திருநாக்கரா மஹாதேவா கோயில் ஆகும். இது கோட்டயத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
16ம் நூற்றாண்டில் தெக்கும்கூர் ராஜாவால் கட்டப்பட்டதாக இதன் வரலாற்றுப்பின்னணி தெரிவிக்கின்றது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிப்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
இந்த கோயிலின் மூலவராக சிவபெருமான் தரிசனம் அளிக்கின்றார். திருவிழாக்காலங்களில் இக்கோயிலில் அதிக பக்தர்கள் திரள்கின்றனர். பல்குண உத்சவம் எனும் 10 நாள் திருவிழா இக்கோயிலில் வருடாவருடம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நடத்தப்படும் கதகளி, வெலகளி போன்ற கேரள கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.
கேரள பாரம்பரிய கலை அம்சங்களுடன் கட்டப்பட்டிருக்கும் கம்பீரம் மட்டுமல்லாது இங்குள்ள சுவரோவியங்களும் கலை ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து இழுக்கின்றன. கூத்தம்பலம் எனும் அரங்கேற்ற மண்டபம் மற்றும் விநாயகருக்கான சிறு சன்னதிகள் போன்றவற்றையும் இக்கோயிலில் காணலாம்.