குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் இது. கும்பகோணத்தின் இரண்டு புறங்களிலும் காவிரி மற்றும் அரசலாறுகள் பாய்கின்றன. கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன.
கும்பகோணம் பல மிகச் சுவையான வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்திலேயே இந்நகரம் இருந்ததாக நம்பப்படுகிறது.
தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது.
7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர். அதன் பிறகுதான் இந்நகரம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எனினும் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில்தான், கும்பகோணம் வளத்திலும், சிறப்பிலும் உச்சத்தை அடைந்தது.
மதம் சார்ந்த கல்வி மற்றும் கலாச்சாரக் கல்வி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க மையமாக இந்நகரம் திகழத்தொடங்கியதால், அப்போது இந்நகரம் "தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.
கோவில் நகரம்
கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது.கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ சாரங்கபாணி கோவில், ஸ்ரீ ராமசாமி கோவில் ஆகியவை இங்குள்ள கோவில்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற மகாமக திருவிழா இந்நகரத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
மகாமகத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கும்பகோணத்திற்கு வருகிறார்கள்.
கும்பகோணத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும், தமது ஆட்சிக்காலத்தில், இங்கு பல கோவில்களை கட்டுவதில் குறியாக இருந்துள்ளனர். எனினும் கும்பகோணத்தை தமது தலைநகரமாக கொண்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்த இடைக்காலச் சோழர்கள்தான் இங்கு கோவில்களை அமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.
ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவிலானது, இடைக்காலச் சோழர்களின் காலத்தில், கி.பி.7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவன் கோவிலான இதுதான் இங்குள்ள கோவில்களிலேயே மிகப் பழமையானது ஆகும்.
ஒவ்வொரு ஆட்சியாளரும் தாம் கட்டும் கோவில்கள் தமக்கு முன்னவர்களால் கட்டப்பட்ட கோவில்களை விடச் சிறப்பானதாக அமைய வேண்டும் என்று விரும்பி பெரிதும் முயன்றுள்ளனர்.உதாரணமாக நாயக்க மன்னர்கள் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயத்தை 12 தளங்களுடன் கட்டினார்கள்.
இந்நகரத்தை 16 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ரகுநாத நாயக்கர், ஸ்ரீ ராமசுவாமி ஆலயத்தின் சுவர்களில், இராமாயணத்தில் உள்ள காட்சிகளை ஓவியமாகத் தீட்டச் செய்துள்ளார்.
இப்பிரபஞ்சத்தையும், பூமியிலுள்ள உயிர்களையும் படைத்த பிரம்ம தேவனுக்கும் இங்கு கோவில் ஒன்று உள்ளது. உலகத்திலேயே பிரம்மனுக்கு ஒரு சில இடங்களில்தான் கோவில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கும்பகோணத்தில் உள்ளது என்பது இந்நகரத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
யாத்திரீகர்களின் பூமி
இந்து ஆலயங்களை தவிர, ஏராளமான மடங்கள் இங்கு உள்ளன. இம்மடங்களனைத்தும் இந்து மடாலாயங்கள் ஆகும். ஆரம்பத்தில் காஞ்சிபுரத்தில் இருந்த புகழ்பெற்ற ஸ்ரீ சங்கரமடம், பிரதாப் சிங் என்னும் மன்னர் இந்நகரத்தை ஆண்டபொழுது கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது.
பின்னர் 1960களில் இம்மடம் திரும்பவும் காஞ்சிபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. கும்பகோணத்தில், தர்மபுரத்திற்கு அருகில் ஒன்றும் திருப்பனந்தாளுக்கு அருகில் ஒன்றும் ஆக இரண்டு வேளாளர் மடங்கள் அமைந்துள்ளன.
கும்பகோணம் நகரத்தினுள் ராகவேந்திரமடம் உள்ளது. வைஷ்ணவ மடத்தின் கிளையான ஸ்ரீ அஹோபிலமடமும் இங்கு அமைந்திருக்கிறது. பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில்,உப்பிலியப்பன் கோவில், சோமேஸ்வரர் ஆலயம் மற்றும் கம்பகரேஸ்வரர் ஆலயம் ஆகியவை இங்குள்ள ஏராளமான கோவில்களில் சிலவாகும்.
இந்நகரத்திலும் நகரத்தைச் சுற்றிலும், ஏராளமான கோவில்களும் மடங்களும் அமைந்துள்ளதால், இந்து யாத்திரீகர்களுக்கு விருப்பமான இடமாக கும்பகோணம் அமைந்துள்ளதில் வியப்பேதுமில்லை.
காலநிலை
குளிர்காலமே கும்பகோணத்திற்கு சுற்றுலா செல்வதற்கு உகந்த காலமாகும். சுற்றுலாப் பயணிகளும், யாத்திரீகர்களும் இக்காலத்தில் கும்பகோணம் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர்
செல்லும் வழி
கும்பகோணத்திற்கு சாலை வழியாகவும் இரயில் வழியாகவும் செல்வது எளிது. கோவில்களும், மடங்களும் நிறைந்த நகரத்தில் ஒளிந்துள்ள ஆச்சரியங்களை ஆராய சுற்றுலாப் பயணிகளை இந்நகரம் வரவேற்கிறது.