தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுவாமி ஆலயம் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் ஆலயமாகும். நாயக்க மன்னர்களின் பிரதம மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சிதரின் முயற்சியால் இக்கோவில் கட்டப்பட்டது.
நாயக்கமன்னர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவை வணங்கிவந்தவர்கள். பெருமாளுக்கு ஆலயம் எடுப்பதைப் பெருமையாகக் கருதியவர்கள். இக்கோவிலின் பாணி அக்காலத்தில் பின்பற்றப்பட்ட நாயக்கர் காலக் கட்டிடக் கலையைச் சேர்ந்ததாகும்.
அழகிய கைவேலைப்பாடுகள் இக்கோவிலின் முழுமையும் தென்படுகின்றன. ஸ்ரீ ராமசுவாமி ஆலயத்துக்கும் அதற்குமுன் பல நூற்றாண்டுக்குமுன் கட்டப்பட்ட ஸ்ரீ சக்கரபாணி ஆலயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் நீண்ட பிரகாரம் கட்டி அதனை வணிகப் பயன்பாட்டுக்கென அனுமதித்தார் கோவிந்த தீட்சிதர்.
இக்கோவிலின் சுவர்களில், ராமாயணத்தில் வரும் அனைத்து காட்சிகளும் ஓவிங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தீட்டப்பட்டுள்ளன.