கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கூடுமலை பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். கூடுமலையில் கோயில் கொண்டிருக்கும் விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த விநாயகர் சிலை மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவால் நேரடியாக கூடுமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்பு விநாயகர் சிலையை சுற்றி விஜயநகர மன்னர்கள் கோயில் கட்டினார்கள்.
கூடுகின்ற மலை என்ற அர்த்தத்தில் கூடுமலை என்று அழைக்கப்படுகிறது. கடவுள்கள் பொழுது போக்குவதற்காக மேலிருந்து இங்கு இறங்கி வருவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். அதன் காரணமாகவே இதற்கு கூடுமலை என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கூடுமலையின் விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர் சிலை பதிமூன்றரை அடி உயரம் கொண்டது. அதோடு இந்தக் கோயில் இரண்டு வெவ்வேறு வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதை பழங்காலத்தில் கட்டிடக் கலையில் சிறந்த நிபுணராக விளங்கிய ஜனாக்சாரி என்பவரும் அவர் மகன் தக்கனாசாரி என்பவரும் சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.
கூடுமலையில் உள்ள சோமேஸ்வரா ஆலயம் விநாயகர் கோயிலை விட பழமையானது. இது சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்பது மேலும் ஒரு சிறப்பான செய்தி.
கூடுமலையிலிருந்து 118 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சாலை மூலமாகவும் பயணிகள் சுலபமாக கூடுமலையை அடையலாம்.