பெயரிலிருந்தே நம்மால் புரிந்து கொள்ளமுடியும் இது பிர்லா எனும் பிரபல செல்வந்தர் குடும்பத்தால் கட்டப்பட்ட கோயில் என்பதை. மறைந்த ‘ஜுகல் பிர்லா’வால் இக்கோயில் 1952ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.
இந்த கோயில் கட்டப்பட்ட பின்னரே இந்த ஸ்தலத்திலிருந்த இதர புராதன கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு ஒரு முக்கிய யாத்ரீக சுற்றுலா தலமாகவும் இந்த இடம் மாறியது.
கட்டப்பட்ட நாளிலிருந்தே இந்த கோயில் குருக்ஷேத்ரா ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இருந்து வருகிறது. பழைய நகர்ப்பகுதியின் எல்லையில் குருக்ஷேத்ரா- தானேசர் சாலையில் இந்த கோயில் வீற்றுள்ளது.
பிரம்ம சரோவர் தீர்த்தத்திற்கு வெகு அருகில் உள்ள இந்த கோயில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
பிர்லா மந்திர் தூய்மையான வெண்பளிங்குக்கற்களால் கட்டப்பட்டு பின்புறம் ஒரு அழகிய நந்தவனத்தையும் கொண்டுள்ளது. கிருஷ்ணர் குருக்ஷேத்ரப்போரின்போது குதிரைகள் பூட்டிய தேர்மீது சாரதியாக அமர்ந்து அர்ஜுனனுக்கு கீதாபதேசம் செய்யும் காட்சி கோயிலின் பிரதான வளாகத்தில் சிற்ப வடிப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கூப்பிய கரங்கள் மற்றும் கூரிய கவனத்துடன் அர்ஜுனன் தனக்கான உபதேசத்தை கேட்டுக்கொள்வதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
தானேசர் ஸ்தலத்திலுள்ள கோயிலில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற மூலவடிவத்தின் நகலாகத்தான் இந்த சிற்பச்சித்தரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மஹாபாரத காலத்தில் கீதாபோதேசம் நிகழ்ந்த அதே இடத்தில்தான் தானேசர் கோயில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிர்லா மந்திர் கோயிலில் இதர பல தெய்வங்கள் மற்றும் யோகிகளின் சிலைகளும் காணப்படுகின்றன. கிருஷ்ணர், ஹனுமான், ஷீராமர், குரு நானக், குரு கோபிந்த் சிங், குரு தேக் பகதூர், சந்த் ரவிதாஸ் ஆகியோரது உருவங்களுடன் அவர்களது போதனைகளும் இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன.