குருத்வாரா செவின் பாட்ஷாஹி ஆறாவது சீக்கிய குருவாகிய ஷீ ஹர்கோபிந்த் அவர்களின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருக்கிறது. இவர் தனது ஆயுதந்தாங்கிய பாதுகாவல் படையுடன் இந்த ஸ்தலத்திற்கு ஒரு முறை விஜயம் செய்துள்ளார்.
ஆயுதபாணியான ஒருவர் எப்படி குரு நானக்கின் வழித்தோன்றலாக இருக்க முடியும் அப்போது மக்கள் வியந்துள்ளனர். இதற்கு இந்த குரு ‘பக்தி’ மற்றும் ‘சக்தி’ ஆகிய இரண்டுக்குமான தொடர்பு குறித்து விளக்கம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த குருத்வாராவின் கட்டுமானம் 1909ம் ஆண்டு தொடங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்போது காணப்படும் பிரதான வளாகம் வெகு காலம் கழித்தே கட்டப்பட்டிருக்கிறது.
பிரதான கூடத்தில் 6 அடி உயர பீட அமைப்பின்மீது தாமரை இதழ்கள் போன்ற மாடத்தின்மீது குரு கிரந்த சாஹீப் வைக்கப்பட்டிருக்கிறது. புனித நூலை தாங்கும் சலவைக்கல் இருக்கையை சுற்றிலும் சலவைக்கல்லால் ஆன கற்பலகைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மற்ற எல்லா குருத்வாராக்களையும் போலவே இங்கும் பக்தர்கள் உடற்சுத்தி செய்துகொள்வதற்காக ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. லங்கார் எனப்படும் இலவச உணவு மற்றும் யாத்ரீகர்களுக்கான தங்கும் வசதிகளும் இங்கு செய்து தரப்படுகின்றன.
குருக்ஷேத்ராவில் உள்ள பழமையான குருத்வாராக்களில் ஒன்றான இது குருக்ஷேத்ரா-தானேசர் சாலையில் முக்கியமான இடத்தில் ரயில் நிலையத்திற்கு வெகு அருகே அமைந்துள்ளது. விசாலமாக காணப்படும் இது மண்டல குருத்வாரா நிர்வாக குழுக்களுக்கான தலைமையகமாகவும் இயங்குகிறது.