சரஸ்வதி கக்கார் ஆற்றங்கரையில் குருக்ஷேத்ரா மாவட்டத்தின் ஒரு அங்கமாக புராதன வரலாற்று நகரம் தானேசர் வீற்றிருக்கிறது. இது டெல்லியிலிருந்து வடமேற்கே 160 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
ஹர்ஷவர்த்தனரின் தந்தையான பிரபாகரவர்த்தனரால் இந்த நகரம் ஆளப்பட்டிருக்கிறது. வர்தன வம்சத்தின் முதல் அரசரான அவர் ஸ்தானேஸ்வர் என்ற பெயரில் இந்த தானேசர் நகரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார்.
1950 ம் ஆண்டு வரை அடையாளமில்லாத ஒரு சிறு கிராமமாகவே இந்த தானேசர் இருந்து வந்துள்ளது. 1947ம் ஆண்டில் பிரிவினைக்குப்பிறகு இப்பகுதியில் பெரிய அகதி முகாம் ஒன்று உருவாக்கப்பட்டது.
கொஞ்சமாக இந்த குடியிருப்பு ஒரு நகரமாக மாறியது. 1973ம் ஆண்டில் குருக்ஷேத்ரா மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டபின் அம்மாவட்டத்தின் முக்கியமான நகரமாக தானேசர் வளர ஆரம்பித்தது.
இருப்பினும் தானேசர் நகரத்தை குருக்ஷேத்ராவுடன் மக்கள் குழப்பிக்கொள்கின்றனர். புராணிக முக்கியத்துவத்தை முன்னிறுத்துவதற்காகவே இம்மாவட்டத்திற்கு குருக்ஷேத்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
புராணக்கதைகளின்படி, சூரிய கிரகண திருவிழாவில் கலந்துகொள்வதற்காக கிருஷ்ணர் தனது குடும்பத்தாரோடு இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்ததாக சொல்லப்படுகிறது.
பிற்காலத்தில் முகலாய அரசர் அக்பரும் சூரிய கிரகணத்தை தரிசிப்பதற்காக 1567ம் ஆண்டில் இங்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. அவரோடு அவரது அவைக்குறிப்பாளரான அபுல் ஃபசல் என்பவரும் உடன் வந்துள்ளார்.
இவர் தனது அக்பர்னாமா நூலில் குருக்ஷேத்ரா ஸ்தலத்தில் நடைபெறும் சூரிய கிரகண திருவிழா பற்றியும் யாத்ரீகர்கள் பிரம்ம சரோவர் தீர்த்தத்தில் புனித நீராடுவது குறித்தும் எழுதியுள்ளார்.
மன்னர் ஷாஜஹான் காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஃப்ரெஞ்சு பயணியான ஃப்ரான்ஸ்வா பெர்னியர் சூரிய கிரகண நாட்களில் சிந்து, கங்கை மற்றும் தானேஷ்வர் தீர்த்தங்களில் மக்கள் புனித நீராடும் வழக்கம் குறித்து தனது பயண நூல்களில் எழுதியுள்ளார்.
வரலாற்றாசிரியர்கள் இந்த சூரிய கிரகண திருவிழாவுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இடையேயான தொடர்பு குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போதைய கக்கார் ஆறு வேதகாலத்தில் சரஸ்வதி ஆறாக அறியப்பட்டதா என்பது குறித்தும் ஆய்ந்து வருகின்றனர்.