தல் சாப்பர் சரணாலயம் லாட்னூன் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் இந்தியாவின் மிக அழகான மான் வகையை சேர்ந்த கருப்பு வெளிமான்களுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.
இங்கு செழுமையாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்கள் சரணாலயத்தின் அழகுக்கு அழகு சேர்க்க கூடியவை. மேலும் இங்கு அவ்வப்போது தோன்றி மறையும் பருவ கால குளங்கள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு நீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.
தல் சாப்பர் சரணாலயம் மோத்தியா என்று அழைக்கப்படும் விஷேசமான புல் வகைக்காக மிகவும் பிரபலம். இந்த புற்களின் விதைகள் முத்து போன்று இருப்பதால் இந்த வகை புற்கள் முத்து என்று பொருள்படும்படி 'மோத்தியா' என்று அழைக்கப்படுகின்றன.
மேலும் வெளிமான்கள் மற்றும் பறவைகளுக்கு உணவாக விளங்கி வரும் இந்த இனிப்புமிக்க புற்களின் விதைகளை பயணிகளும் சுவைத்து மகிழலாம்.
தல் சாப்பர் சரணாலயம் பூனைப்பருந்து எனும் புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாகவும் விளங்கி வருகிறது. அதுவும் செப்டம்பர் மாதங்களில் இந்த வகை பருந்துகளை சரணாலயத்தில் அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம்.
அதோடு பழுப்பு நிற கழுகுகள், குறுகிய காலுடைய கழுகுகள், சிட்டுக்குருவிகள், முகட்டு வானம்பாடிகள், பச்சை வண்ண தேனீ தின்னிகள், பழுப்பு நிற புறாக்கள், கருப்பு நாரைகள் போன்ற பறவைகளையும் இந்த சரணாலயத்தில் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதங்களில் இந்த சரணாலயத்துக்கு யுரேசியா பகுதிகளிலிருந்து அரிய பறவை இனமான இள நாரைகள் புலம்பெயர்ந்து பெரும்கூட்டமாக வந்து செல்கின்றன.
இவைதவிர பாலைவன நரிகள், பாலைவன பூனைகள், கெளதாரிகள், சதுப்புநிலக் கோழிகள் உள்ளிட்ட விலங்குகளையும், பறவைகளையும் நீங்கள் இந்த சரணாலயத்தில் பார்க்கலாம்.