லக்ஷ்வதீப் பகுதியின் உல்லாசப்பொழுதுபோக்கு மையமாக இந்த காவரத்தி தீவு புகழ் பெற்றுள்ளது. தோராயமாக கொச்சி கடற்கரையிலிருந்து 360 கி.மீ தூரத்திலும் அகத்தி தீவிலிருந்து 50 கி.மீ தூரத்திலும் இந்த தீவு அமைந்துள்ளது.
இந்திய கடற்கரையிலிருந்து நேரடி சொகுசுபடகு போக்குவரத்து மற்றும் அகத்தி தீவிலிருந்து ஹெலிகாப்டர் சேவை போன்றவற்றை இது கொண்டுள்ளது. லக்ஷ்வதீப் பகுதியின் தலைநகரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சிறு அழகிய தீவு நகரமான காவரத்தி 10000 குடிமக்களை கொண்டுள்ளது. நீர் விளையாட்டு அம்சங்கள், ஷாப்பிங் மற்றும் மியூசியங்கள், மசூதிகள் போன்ற பண்பாட்டுத்தலங்கள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது.
ஏனைய தீவுகள் போன்ற காவரத்தி தீவும் தனது அழகிய கடற்கரைகளால் பயணிகளை வெகுவாக கவர்கிறது. இந்த தீவு நகரத்தில் கிடைக்கும் வித்தியாசமான கடல் உணவுகள் சுவைத்துப் மகிழவேண்டிய அற்புதங்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
4.22 ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்ட இந்த தீவு முழுதையும் சுலபமாக சுற்றிப்பார்த்து விடலாம். நல்ல சாலை வசதிகளை கொண்ட இந்நகரத்தில் ஊர் சுற்றிப்பார்க்க பைக்குகள் வாடகைக்கு கிடைக்கின்றன.
நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாதவர்களுக்கேற்ற நீர் சம்பந்தப்பட்ட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு மிகுதியாக காணப்படுகின்றன. இங்குள்ள மரைன் மியுசியத்தில் பலவகை மீன்கள் மற்றும் பலவிதமான நீர்வாழ் உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பயிற்சியாளர்களுடன் கூடிய ஸ்கூபா டைவிங் நீர் மூழ்கு பயணங்கள் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஆழத்தில் செல்வதற்கு அச்சப்படுபவர்கள் குறைந்த ஆழத்தில் மேற்கொள்ளப்படும் முறையான ‘ஸ்நார்க்கெலிங்’ உபகரணங்களை பயன்படுத்தி டைவிங்’கில் ஈடுபடலாம்.
இது தவிர கண்ணாடி அடித்தளத்துடன் அமைக்கப்பட்ட விசேஷ படகுகளில் பயணம் மேற்கொண்டு கடலில் உள்ள பவழப்பாறை அமைப்புகள் மற்றும் உயிரிங்னங்களை பார்த்து ரசிக்கலாம். இதர நீர் விளையாட்டு அனுபவங்களுக்கு கவரத்தியில் உள்ள ‘டால்பின் டைவிங் செண்டர்’ எனும் இடத்துக்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.
லக்ஷ்வதீப்பின் பெரும்பான்மையான குடிமக்கள் முஸ்லிம் மார்க்கத்தையே பின்பற்றுகின்றனர் என்பதால் இங்கு ஈத் திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் இங்குள்ள உஜ்ரா மசூதி விழா கொண்டாட்டங்களுடன் காட்சியளிக்கிறது.
இந்த மசூதி 17 ம் நூற்றாண்டில் ஷேய்க் முஹம்மத் காசிம் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வெண்மையான மணற்பரப்புடன் எழிலுடன் காட்சியளிக்கும் காவரத்தி தீவு பல வருடங்களாக கோடைச்சுற்றுலா பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது. மரகதப்பச்சை நிறத்தில் ஸ்படிகம் போன்று பிரகாசிக்கும் இந்த தீவின் கடற்கரை நீர் உற்சாகமான மதிய குளியலுக்கு மிகவும் ஏற்றது. அதிகம் பரபரப்பில்லாத அமைதியான சூழலைக்கொண்டுள்ள இந்த தீவு ஒரு வித்தியாசமான விடுமுறை அனுபவத்தை தர காத்திருக்கிறது.