லக்னோ நகரில் கோமதி ஆற்றங்கரையில் தில்குஷ் பகுதியில் இந்த தில்குஷா கொத்தி உள்ளது. பிரிட்டிஷ் மேஜர் கோர் ஔசிலே என்பவரால் 1800ம் ஆண்டில் இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இவர் அக்காலத்திய ஆவாத் நகர நவாப் சதாத் அலி கானுக்கு நண்பராவார். இந்த வரலாற்று சின்னம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள நார்த் உம்பெர்லேண்ட் எனும் இடத்திலுள்ள சீட்டன் டெலாவால் ஹால் கட்டிடத்தை போன்று இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பத்தில் ஒரு வேட்டை மாளிகையாக கட்டப்பட்ட இந்த சொகுசு மாளிகை பின்னர் ஒரு கோடை வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. உள் முற்றம் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள இம்மாளிகை அளவில் சிறியதாகவும் அமைந்துள்ளது.
பெரும்பாலும் பிரம்மாண்டமான மாளிகைகளிலேயே வசித்து வந்த நவாப் ராஜ வம்சத்தினர் இதில் எப்படி வசித்தனர் என்பது ஒரு பெரிய ஆச்சரியமாகும். 1857ம் வருடம் நிகழ்ந்த முதல் சுதந்திரப்புரட்சியின் இந்த மாளிகையும் பங்கேற்றுள்ளது.
போராட்டத்தலைவர்கள் இங்கு ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி திட்டங்கள் தீட்டியுள்ளனர். இருப்பினும் பலத்த பீரங்கி தாக்குதலை நிகழ்த்தி இம்மாளிகையை ஆங்கிலேய ராணுவம் கைப்பற்றிக்கொண்டது. அத்துடன் இந்த தில்குஷா கொத்தியின் சிறப்பும் முக்கியத்துவமும் மறைந்துபோனது.