ஹுசைனாபாத் கிளாக் டவர் எனும் இந்த மணிக்கூண்டு ஹுசைனாபாத் இமாம்பாராவுக்கு எதிரே ரூமி தார்வாஸாவிலிருந்து 1 மைல் தூரத்தில் உள்ளது. 221 அடி உயரமுள்ள இந்த மணிக்கூண்டு இந்தியாவில் உள்ளவற்றிலேயே மிக மிக உயரமான மணிக்கூண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஸ்க்கெல் பேய்ன் எனும் கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டு 1887ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மணிக்கூண்டு விக்டோரியன் – காதிக் பாணி கட்டிடக்கலை அம்சத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆவாத் மாகாண கவர்னராக நியமிக்கப்பட்ட சர் ஜார்ஜ் கூப்பர் என்பவரை வரவேற்கும் விதமாக நவாப் நசிருதீன் இதன் கட்டுமானத்தை துவங்கியுள்ளார்.
இவரது மரணத்தால் இதன் கட்டுமானம் நின்றுபோன போதிலும் பின்னர் 1887ம் ஆண்டில் முடித்துவைக்கப்பட்டது. இந்த மணிக்கூண்டினை கட்டுவதற்கு அக்காலத்திலேயே பெருந்தொகையான 1.74 லட்ச ரூபாய் செலவானதாக சொல்லப்படுகிறது.
விண்ணை முட்டுவது போன்று அமைந்திருக்கும் இந்த மணிக்கூண்டில் உள்ள வெண்கலத்தால் ஆன கடிகாரத்தின் பாகங்கள் லண்டன் மாநகரத்திலுள்ள லூயிகேட் ஹில் எனும் இடத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன.
14 அடி நீளமும் ஒன்றை அங்குல அகலமும் கொண்ட இதன் முள் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கடிகாரத்தில் உள்ளதை விடவும் பெரியது என்பது ஒரு ஆச்சரியமூட்டும் தகவலாகும்.
ஒரு மலர்போன்ற முகப்பு வடிவத்தில் எண்கள் பதிக்கப்பட்டு அதில் முட்கள் சுழலும்போது நேரத்திற்கேற்ப மணிகள் ஒலிக்கும் வகையில் இந்த கடிகாரம் வெகு நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.