இந்தியாவில் பல மோத்தி மஹால் மாளிகைகள் அமைந்துள்ளன. தற்போது இவை யாவுமே ஹோட்டல்களாகவும் உணவகங்களாகவும் இயங்குவது குறிப்பிடத்தக்கது. லக்னோவிலுள்ள மோத்தி மஹால் அக்காலத்தில் ஆவாத் நவாப் மன்னர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது.
முத்து மாளிகை என்றும் அழைக்கப்படும் இந்த மாளிகை கோமதி ஆற்றங்கரையில் ஹர்ஸத்கஞ்ச் அருகில் ராணா பிரதாப் சாலையில் ஸ்டேடியத்திற்கு எதிரில் அமைந்திருக்கிறது.
முத்து போன்ற வெண்ணிறத்தை கொண்டிருப்பதால் இதற்கு முத்து மாளிகை என்று பெயர் வந்துள்ளது. இந்த மாளிகை நவாப் சதாத் அலி கான் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
பலவிதமான விலங்குச்சண்டைகளை பார்த்து ரசிப்பதற்கும் ஆற்றங்கரையில் விதவிதமான பறவைகளை பார்த்து ரசிக்கும் நோக்கத்துடனும் இம்மாளிகை உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதன் உண்மையான நோக்கம் எதிரிப்படைகள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகத்தான் என்று கருதப்படுகிறது.
பின்னாளில் ஷா மன்ஸில் மற்றும் முபாரக் மன்ஸில் எனும் இணைப்புகளையும் இம்மாளிகை வளாகத்தில் நவாப் மன்னர்கள் சேர்த்துள்ளனர்.