வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் எனும் இந்த குளம் 1646-ம் ஆண்டில் வெட்டுவிக்கப்பட்டிருக்கிறது. திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்டமான குளம் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிழக்காக 5 கி.மீ தூரத்தில் உள்ளது. குளத்தின் மையத்தில் விநாயகர் சன்னதி வீற்றிருக்கிறது. திருமலை நாயக்கர் அரண்மனையை கட்டுவதற்கான கற்களை உருவாக்க மண் தோண்டியபோது உருவாகிய குளம் இது என்பதாகவும் பின்னாளில் படித்துறைகளுடன் கூடிய தீர்த்தக்குளமாக வடிவமைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி/பிப்ரவரி மாதத்தில் இந்த குளத்தில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த குளத்திற்கான நீர் வரத்து வைகை ஆற்றிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. மதுரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை பார்க்காமல் திரும்புவதில்லை.