மத்தியப்பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் அமைந்துள்ள மஹேஷ்வர் ஒரு பழம்பெருமை வாய்ந்த நகரமாகும். பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் இந்நகரம், மிக நேர்த்தியான கைத்தறி ஆடைகளுக்கும் பிரபலமாக உள்ளதனால் மஹேஷ்வரின் சுற்றுலாத்துறை ஊக்கமுடன் செயல்பட்டு வருகின்றது. இது மட்டுமின்றி, மத்தியப்பிரதேசத்தின் கலாச்சார பெருமை வாய்ந்த ஸ்தலங்களுள் ஒன்றாகவும் இந்நகரம் உள்ளது.
மஹேஷ்வர் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
மஹேஷ்வர் சுற்றுலாத் திட்டங்களில், பயணிகளை கவரக்கூடியனவாகிய பாரம்பரிய பெருமை பொதிந்த ஸ்தலங்கலே பெரும்பாலும் இடம் பிடித்துள்ளன.
கோட்டைகள், படித்துறைகள், இங்குள்ள அரண்மனைகள், கோயில்கள் மற்றும் இதர ஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகள் பெருந்திரளாகக் கூடி தங்களின் மஹேஷ்வர் சுற்றுப்பயணத்தை மகிழ்ச்சிகரமாகக் கழிக்க மெனக்கிடுகின்றனர்.
மஹேஷ்வர் முழுக்கக் காணப்படும் பாரம்பரியக் கட்டடங்களின் தனித்துவமான கட்டுமான பாணி, வித்தியாசமான நியமங்களைக் கொண்டு, சுற்றுலாப் பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வண்ணம் காணப்படுகின்றது.
மஹேஷ்வர் – தெய்வீகத் தொடர்பு மற்றும் கொண்டாட்டங்கள்
மஹேஷ்வர் ஏராளமான சிவன் கோயில்களைக் கொண்டுள்ளது. மஹேஷ்வர் என்ற பெயரை மொழி மாற்றம் செய்தால், அது மஹேஷ் என்ற பெயரிலும் வழங்கப்படும் சிவபெருமானின் பெயரில், “மஹேஷரின் உறைவிடம்” என்ற அர்த்தம் வருமாறு வழங்கப்பட்டு வருவது விளங்கும்.
இவ்விடம் தொன்றுதொட்ட காலம் முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் யாத்ரீக மையமாக விளங்குகிறது. இங்கு வரும் பயணிகள், புண்ணிய நதியான நர்மதாவில் புனித நீராடி, மஹேஷ்வரின் கோயில்களை வலம் வரும் போது, உண்மையான தெய்வீக உணர்வைப் பெறுவர்.
இந்நகரம், அனைத்து விழாக்களும் மிகவும் ஆர்வத்தோடும், கோலாகலமாகவும், சந்தேகத்துக்கு இடமின்றி கொண்டாடப்படும் ஒரு ஸ்தலமாக விளங்குகிறது. மஹாமிருத்யுஞ்சய ரத யாத்திரை, கணேசருக்கான திருவிழாக்கள் மற்றும் நவராத்திரி ஆகியவை இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் சில திருவிழாக்கள் ஆகும்.
மஹேஷ்வரை எவ்வாறு அடையலாம்?
மஹேஷ்வர் இந்தூரிலிருந்து சுமார் 3 மணி நேர பயணத் தொலைவில் உள்ளது. மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களிலிருந்து மஹேஷ்வர் செல்வதற்கு பேருந்துகள் மிக வசதியான தேர்வாக விளங்குகின்றன.
மஹேஷ்வரில் விடுமுறையைக் கழிக்க ஏற்ற காலம் குளிர்காலமேயாகும். இங்கு விடுமுறையைக் கழிக்க வருவோர், உங்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கும் பெண்களுக்கு, மஹேஷ்வரில் தயாராகும் நூல் புடவைகளை வாங்கிச் செல்ல மறவாதீர்கள்.